உரை
 
2. இலாவாண காண்டம்
 
7. நகர்வலங் கொண்டது
 
           குன்றுகண் கூடிய குழாஅம் ஏய்ப்ப
     05    ஒன்றுகண் டன்ன ஓங்குநிலை வனப்பின்
           மாடம் ஓங்கிய மகிழ்மலி  மூதூர்
           யாறுகண்  டன்ன அகன்கனை வீதியுள்
           காற்றுறழ் செலவிற் கோற்றொழில் இளையர்
           மங்கல மரபினர் அல்லது மற்றையர்
     10     கொங்கலர் நறுந்தார்க் குமரன் முன்னர்
           நில்லன்மி னீரென நீக்குவனர் கடிய
 
               4-11; குன்று.......கடிய
 
(பொழிப்புரை) மலைக்கூட்டத்தைக் கண்டாற் போல்வனவும் தம்முள் ஒன்றை ஒன்று ஒத்த உயரமுடையனவும் உயர்ந்து நிற்றலான் உண்டான அழகினையுடையனவுமாகிய மாடவீடுகள் மிக்கதும் மகிழ்ச்சி மிகுதற்குக் காரணமானதும் பழைதுமாகிய அந் நகரத்தின்கண்ணுள்ள பேரியாறுகளை ஒத்த அகலமும் ஆரவாரமுமுடைய தெருக்களிலே புகுந்து காற்றை ஒத்த செலவினையும் காவற்றொழிலையும் உடைய வீரர் ஆண்டுக் குழுமியுள்ள மங்கலமரபினர் அல்லாத ஏனையோரை நோக்கி 'மணங் கமழும் நறிய மாலையினையுடைய உதயணகுமரன் முன்னர் நீயிர் நில்லாதே கொண்மின்' என்றுகூறி நீக்கிக் கடியா நிற்ப என்க.
 
(விளக்கம்) 4. குழாம்-கூட்டம், ஏய்ப்ப-ஒப்ப.      
    5. ஒன்றுபோல அனைத்தும் உயர்ந்த நிலைமையினையுடைய அழ கினையுடைய மாடம் என்க. குன்றுகள் கூடிய குழாம் ஏய்ப்ப ஓங்குநிலை மாடம், ஒன்று கண்டன்ன
  ஓங்குநிலை மாடம் எனத் தனித்தனி கூட்டுக,
    6. மகிழ்-மகிழ்ச்சி. மூதூர்-பழைதாகிய ஊர்.
    7. யாறுகள் போன்ற அகலமும் ஆரவாரமும் உடைய வீதி என்க, கனை-ஆரவாரம்.
    8. .காற்றுறழ் - காற்றை ஒத்த. செலவு - செல்லுதல். கோல் ஏந்திக்காக்குந் தொழில் என்க. இளையர் என்றது மறவர் என்பது படநின்றது.     
    9. மங்கலமரபினர்-சான்றோர் சுமங்கலியர் முதலியோர். மற்றையர் - கயவர் அமங்கலியர் உறுப்பறை முதலியோர்.
    10. கொங்கு-மணம்; தேனுமாம், குமரன்; உதயணகுமரன்.(மற்றையரை) நோக்கி என்க. நீர் நில்லன்மின் என மாறிக் கூட்டுக,
    11, நீக்குவனர்: முற்றெச்சம்.