உரை
 
2. இலாவாண காண்டம்
 
7. நகர்வலங் கொண்டது
 
           காட்சி விரும்பன்மின் மாட்சி யின்றென
           ஈனாத் தாயர் ஆனாது விலக்கும்
     65    ஆணை மறுத்தியாம் ஆண முடைமையின்
           இந்நகர் காண்கஎம் அன்னை மாரெனக்
 
        63- 66 ; காட்சி...,..அன்னைமாரென
 
(பொழிப்புரை) உதயண குமரனைக் காண்டல் விரும்பாதே கொண்மின்; அங்ஙனம் விரும்புதல் மாட்சிமையுடைய தாகாது, என்று செவிலித் தாயர் இடையறாது தடுக்கவும், அவர்தம் கட்டளையை மறுத்து 'எம்மன்னையீர் ! யாம் உதயணனைக்காண விரும்பினோமல்லேம்; ஒப்பனை செய்யப்பட்ட இச்சயந்தியின் அழகினை மட்டுமே காண்பேம் எமக்கு அவ்விருப்பமிருத்தலானே ' என்று கூறி என்க.
 
(விளக்கம்) செவிலியர். உதயணனைக் கண்ட மகளிர் எல்லாம் வருந்தினர் ஆதலான் நீயிர் விரும்பன்மின் மாட்சியின்று என விலக்குகின்ற ஆணையை மறுத்து யாம் ஆணமுடைமையின் நகர் காண்கம் என்று கூறி என இயைக்க
    63. விரும்பன்மின் - விரும்பாதே கொண்மின்.
    64, ஈனாத் தாயர்-செவிலித்தாயர்..ஆனாது - அமையாது;இடையறாமல்.
    65. ஆணம்- விருப்பம்.
    66. காண்கம்-காண்பேம். அன்னைமார்; விளி.