உரை
 
2. இலாவாண காண்டம்
 
7. நகர்வலங் கொண்டது
 
           நேரியற் சாயல் நிகர்தமக் கில்லாக்
           காரிகை கடுநுனைத் தூண்டி லாக
           உட்கு நாணும் ஊராண் ஒழுக்கும்
     75    கட்கின் கோலமுங் கட்டிரை யாக
           இருங்கண் ஞாலத் திளையோர் ஈட்டிய
           அருங்கல வெறுக்கை யவைமீன் ஆக
           வாங்குபு கொள்ளும் வழக்கியல் வழாஅப்
           பூங்குழை மகளிர் புனைமணிப் பைம்பூண்
 
               72-79 ; நேரியல் ........மகளிர்
 
(பொழிப்புரை) இயல் முதலியவற்றில் நிகரில்லாத தமது பேரழகே தூண்டிலாகவும், அச்சமும் நாணமும் ஊராண் ஒழுக்கமும் ஒப்பனையும் அத்தூண்டிலிற் கட்டும் இரையாகவும் உலகத்தில் இளைஞர் திரட்டிய அருங்கலன்களும் பொன்னும் மீனாகவும் அம்மீன்களைப் பிடிக்கும் தமது தொழிலிடத்தே தப்பாத மகளிர் என்க.
 
(விளக்கம்) 72. இயல்-அழகு. சாயல்-மென்மை, நிகர் - ஒப்பு. இல்லார் தமது காரிகை என்க,
    73. கடுநுனை - மிகக் கூர்த்த நுனி,
    74. உட்கு-அச்சம்; ஊராண் ஒழுக்கு-ஒப்புரவொழுகும் ஒழுக்கம்
       
      'கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள்
      உட்கு உடையாள் ஊராண் இயல்பினாள் - உட்கி
      இடனறிந்று ஊடி இனிதின் உணரும்
      மடமொழி மாதராள் பெண்'

    என நாலடியினும் வருதல் உணர்க, இதனை ஆசிரியர் நச்சினார்க்கினியர் (தொல் - கற்பு - 12,) எடுத்துக்காட்டி ''ஊராண்மை,''. இது சுற்றம் ஓம்பல் என்று விளக்கினர்.
    இனி, இவ்வாசிரியர் உஞ்சைக் காண்டத்து 36- 280-1 'வழுக்கிக் கூறினும் வடுவென நாணி, ஒழுக்க நுனித்த ஊராண் மகளிர்' என்றோதுதலும் காண்க.
    75.  கட்கின் - கண்ணுக்கு இனிய. கட்டிரை - அத்தூண்டிலி்ற் கட்டப்படும் இரை.
    76. இருங்கண் ஞாலம் - பெரிய இடத்தையுடைய உலகம்;
    77. அருங்கலம்-பேரணிகலன், வெறுக்கை -பொருள்.
    78. வழாஅ -வழுவாத.