உரை
 
2. இலாவாண காண்டம்
 
7. நகர்வலங் கொண்டது
 
         
    130    ஆடம் பலமும் ஆவண மறுகும்    
           கீத சாலையுங் கேள்விப் பந்தரும்
           ஓது சாலையுஞ் சூதாடு கழகமும்
           ஐவே றமைந்த அடிசிற் பள்ளியும்
           தங்கோள் ஒழிந்த தன்மையர் ஆகி
     135    மண்கா முறூஉம் வத்தவர் மன்னனைக்
           கண்கா முற்ற கருத்தினர் ஆகி
           விண்மேல் உறையுநர் விழையுங் கோலமொடு
           மென்மெல நெருங்கி வேண்டிடம் பெறாஅர்
           அரும்பதி உறைநர் விரும்புபு புகழ
 
                  (நகரமாந்தர் செயல்)
             130-139; ஆடம் பலமும்....,.புகழ
 
(பொழிப்புரை) அரிய அச்சயந்தி நகரத்தே உறையும் மாந்தர் கூத்தாட்டம் பலத்தினும், கடைத்தெருக்களினும், இசைமன்றங்களினும், சொற்பொழிவுப் பந்தரிடத்தும், கல்லூரிகளிடத்தும், சூது மன்றங்களிடத்தும், மடைப்   பள்ளிகளிடத்தும், தமது தொழிலை விடுத்தவராய் உலகத்தாரெல்லாம் விரும்பும் உதயணகுமரனைக் காண்டற்கு விரும்பும், நெஞ்சத்தோடே, அமரரும் விரும்புதற்குக் காரணமான ஒப்பனை அழகோடே  மெல்லமெல்ல வந்து இடம் பெறாமையானே நெருங்கி நின்று  விரும்பிப் புகழா நிற்ப என்க.
 
(விளக்கம்) 130 . ஆடம்பலம் - கூத்தாட்டு மன்றம். ஆவணமறுகு - கடைத்தெரு.
    131, கீதசாலை - இசைமன்றம், கேள்விப்பந்தர்-அறிஞர் சொற்பொழிவினை மக்கள் கேட்டற்குரிய பந்தர் ''தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும். புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின்'' என்றார் மணிமேகலையிலும். (1.58-9)
    133, ஐவேறமைந்த அடிசிற்பள்ளி-மடைப்பள்ளி், ஐவேறுஅமைந்த அடிசிலாவன : கடிப்பன, பருகுவன, விழுங்குவன, நக்குவன, சுவைப்பன என்பனவாம்,
    134. தங்கோள் - தாந்தா மேற்கொண்ட தொழில்.
    135.மண் : ஆகுபெயர்; உலகத்துச்சான்றோர், காமுறூஉம் - விரும்பும்.
    136, கண்; ஆகுபெயர். காட்சியின்பம், விண்மேலுறையுநர்- தேவர்.
    139. விரும்புபு-விரும்பி.