உரை
 
2. இலாவாண காண்டம்
 
7. நகர்வலங் கொண்டது
 
         
     155    மேனீர் ஆவியின் மெல்லி தாகிய
           கழுமடிக் கலிங்கம் வழுவில வாங்கி
           ஒண்மணிக் காசிற் பன்மணிப் பாவை
           கண்ணிய காதல் உண்ணெகிழ்ந்து விரும்பி
           ஆடற் கவாவும் அமிழ்தஞ் சோர
     160    ஊடுபோழ்ந் துறழ ஒலிபெற உடீஇ
           மாலையுஞ் சாந்து மங்கல மரபின்
           நூலிற் றிரியாது நுண்எழில் புரியப்
           புதுவது புனைந்த பூங்கொடி புரையும்
           வதுவைக் கோலத்து வாசவ தத்தை
 
           154-164 பானீர் ................வாசவதத்தை
 
(பொழிப்புரை) பாற்கடலின்கட்  பனிப்பருவத்தே மேலெழுந்த நீராவிபோன்று மெல்லிதாகிய கழுவிய மடியையுடைய ஆடையுட் குற்றமற்றவைகளைத் தேர்ந்தெடுத்து; ஒள்ளிய மணியும், காசும் கலந்த பன்மணிமாலையினையுடைய பாவை போல்வாளாகிய வாசவதத்தை தன் நெஞ்சம் நெகிழ்ந்து புணர்தற்கு விரும்பிய விருப்பமாகிய காதலமிழ்தம் மெய்ப்பாடாக அவ்வாடையின் ஊடே வெளிவந்து அதன் ஒளியோடே மாறுபட்டு ஒளிர்வது போன்று  ஒளிரா நிற்ப உடுத்தி் மங்கல மரபினவாகிய வெண்சாந்தும், வெண்மலர் மாலைகளும் ஒப்பனை நூல் விதியிற் பிறழாமல் அணிதலாலே நுண்ணிய அழகு மிகும்படி புதுவதாக அணிசெய்யப்பட்ட பூங்கொடியை ஒத்த புதுமணக் கோலங்கொண்ட அவ்வாசவதத்தை என்க.
 
(விளக்கம்) 154. பாலாகிய நீர்மையினையுடைய நெடிய கடல் என்க. பனிநாள் - பனிக்காலம்.
    155. கழுமடிக்கலிங்கம் - கழுவித் தூயதாக்கப்பட்ட ஆடை.
    158. பாவை ; உவம ஆகுபெயர்; வாசவதத்தை பாவை விரும்பி உண்ணெகிழ்ந்து கண்ணிய காதலமிழ்தம் ஆடையின் ஊடுவந்து மெய்ப்பாடாக அவ்வாடையின் ஒளியோடே மாறுபட்டொளிர என்க, என்றது காதல் வாழ்விலுண்டாகும் புத்தொளி பொலிய என்றவாறு.
    190. உடீஇ - உடுத்து,
    191. மங்கல மரபின் மாலையும் சாந்தும்-வெண்ணிற மலரானாய மாலையும் வெண்சாந்தும் என்க.
    192. நூல் - ஒப்பனை நூல்விதி ; ஆகுபெயர்.
    193, புரிய - மிகும்படி. "புரிந்த தகையினான் என்புழிப் பரிபாடற்கண் (7-51.) பரிமேலழகர் மிக்க தகையினான்" என்று உரை கூறுமாற்றானும் அஃதப் பொருட்டாதல் உணர்க.