உரை
 
2. இலாவாண காண்டம்
 
8. யூகி போதரவு
 
          கண்ணகன் கிடக்கைக் கலிகெழும் ஊழியுள்
          மண்ணகந் தழீஇ மன்னிய ஊழிதொறும்
          புண்ணிய உலகிற்கும் பொலிவிற் றாமெனத்
          தொன்றோங் காளர் துணியப் பட்ட
     10   பொன்றா வியற்கைப் புகழது பெருமையும்
          ஆன்முலைப் பிறந்த வானிற அமிர்தம்
          மலைப்பெய் நெய்யொடு தலைப்பெய் தாங்கு
          வேறுபட் டேகினும் கூறுபட் டியலா
          அன்பினின் அளைஇய நண்பின் அமைதியும்
     15   அசைவில் தானை விசைய வெண்குடைப்
          பெருநில மன்னர் கருமங் காழ்த்த
          அருமதி நுனித்த அமைச்சின் ஆற்றலும்
          இன்னவை பிறவுந் தன்வயின் தாங்கி
           
            6 - 18 ; கண்ணகன்,..,......தாங்கி
 
        6 - 18 ; கண்ணகன்,..,......தாங்கி
 
(பொழிப்புரை) அவ் யூகி என்னும் அமைச்சன், வானவூழி முதலிய ஐவகை யூழியினுள் நிலத்தை உள்ளீடாகத் தழுவப்பட்ட நிலவூழிகளாகிய கற்பந்தோறும் இடமகன்ற கிடக்கையினையுடைய இவ்வுலக வாழ்க்கையும் மேனிலை உலகத்திற் சென்று வாழும் வாழ்க்கையும் ஆகிய இருவேறு வாழ்க்கைகளுக்கும் பொலிவி்னைத் தருவதாம் என்று பண்டைக்காலத்துச் சான்றோர்களானே தெளிந்து கூறப்பட்ட புகழாலுண்டாய  பெருமையினையும் ஆன்பால் மலைத்தேனோடு கூடினாற்போன்று கலந்து வேறுவேறிடத்துச் சென்றிருப்பினும் மாறுபட்டு இயங்குதல் இல்லாத அன்புகலந்த நட்புப் பண்பினையும், பின்னிடுதல் இல்லாத படையினையும், வெற்றிக் குடையினையும், பெரிய  நிலப்பரப்பினையும் உடைய மன்னர்க்குரிய அரசியற் செயல்களிலே பயின்று முதிர்ந்த பெறற்கரிய நுண்மாணுழை   புலனாலே ஆராய்ந்து தெளிந்த அமைச்சுத் தொழில் வன்மையினையும் இன்னோரன்ன பிற நற்பண்புகளையும் தன்பாற் கொண்டு-என்க.
 
(விளக்கம்) 6, கண்ணகன் கிடக்கை -உலகம்; அஃது ஆகுபெயராய் வாழ்கைக்கு ஆயிற்று. கண்ணகன் கிடக்கைக்கும் எனற் பால உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது,
   7. கலி-ஒசை. ஒசை பொருந்திய வானவூழி முதலிய ஐவகை ஊழியினுள் என்க. அவற்றைக்,
  'கருவளர் வானத் திசையிற் றோன்றி
  உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
  உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்
  செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
  தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
  றுண்முறை வெள்ள ழூழ்கியார் தருபு
  மீண்டும் பீடுயர் பீண்டி அவற்றிற்கும்
  உள்ளீ டாகிய இருநிலத் துழியும்' ( பரிபா.2 . 5 . 12 )
  எனவரும் பரிபாடலான் உணர்க.
   7, நிலத்தை உள்ளீடாகத் தழுவி நிலைபெற்ற நில ஊழிதோறும் என்க. மன்னிய நிலைபெற்ற.
   8. கண்ணகன் கிடக்கைக்கும் புண்ணிய-உலகிற்கும் எனக் கூட்டுக, என்றது இவ்வுலக வாழ்விற்கும் மேனிலை உலகத்தே சென்று வாழும் வாழ்விற்கும் என்றவாறு. புண்ணிய உலகம்-புண்ணியத்தால் எய்தும் மேனிலை யுலகம். பொலிவு தருவதனை பொலிவிற்று என்றார்.
   9. தொன்று-பண்டைக்காலத்து. ஓங்காளர் -உயர்ந்தோர் இனி, புகழ் இவ்வுலகிற்கும் மேனிலையுலகிற்கும் பொலிவிற் றென்றதனோடு,
      'ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
       தூதிய மில்லை உயிர்க்கு'            (திருக்-231)
எனவும்,
      'ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால்  
       பொன்றாது நிற்பதொன் றில்'         (திருக் - 233)
எனவும்,
      'நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
       போற்றாது புத்தே ளாலகு'           (திருக் - 234)
எனவும்,

      'இவண் இசையுடையோர்க் கல்ல
       தவண துயர்நிலை உலகத் துறையுள் இன்மை
       விளங்கக் கேட்ட மாறுகொல்'         (புறநா - 50)
எனவும், வரும் சான்றோர் மெய்மொழிகளையும் ஒப்பு நோக்கியணர்க
   12-23, வால்நிறஅமிர்தம்-பால், மலைப்பெய்நெய்-தேன். இவை வெவ்வேறிடத்துப் பிறந்தனவாயினும் தம்முட் கலப்புற்றுழி பண்பினாலே ஒன்றுபடுதல் போன்று. உதயணனும் தானும் வேறு வேறிடத்தினராயிருப்பினும் நண்புடைமையலே ஒன்றுபட்ட   அமைதியினையும் என்க.
   14. அளைஇய-கலந்த.
   15. விசையம் - வெற்றி.
   16. பெருநில மன்னர்- முடிவேந்தர், காழ்த்த - (பயின்று)முதிர்ந்த.
   17. அருமதி - பெறற்கரிய நுண்மாணுழைபுலன்.
   18. இன்னவை - இவைபோல்வன.