உரை
 
2. இலாவாண காண்டம்
 
8. யூகி போதரவு
 
         
     55   இனையவை பிறவும் புனைநகர் வரைப்பினும்
          கோயின் முற்றத்தும் வாயின் மருங்கினும்
          வம்பலர் மொய்த்த அம்பலத் தகத்தும்
          யானைத் தானந்தும் அருந்தவப் பள்ளியும்
          தானைச் சேரியும் தானெடுத் துரைக்கும்
     60   பாடை அறியாத் தேசிகச் சேரியும்
          ஒதுநர் சாலை யகத்தும் ஓவாச்
          சூதுபொரு கழகத் தருகலுந் தோமில்
          நல்லதுந் தீயதும் அறிந்தகத் தடக்கா
          மட்டுமகிழ் மகளிர் துட்டச் சேரியும்
 
        55 - 64 : இனையவை................. துட்டச் சேரியும்
 
(பொழிப்புரை) இன்னோரன்ன பிற நிகழ்ச்சிகளையும் ஒற்றியறிந்து மேலும், அந் நகரின்கண் ஏனைப்பகுதிகளினும்,அரண்மனை முற்றற்தினும், வாயிலிடங்களினும், புதியோர் வந்து நிரம்பிய அம்பலங்களினும், யானைக் கொட்டில்களினும், தவப்பள்ளிகளினும், மறவர் சேரிகளினும்,தான் எடுத்து மொழியும் மொழியை அறியமாட்டாத பிறநாட்டு வணிகர் உறையும் சேரியினும், கல்லுரிகளிடத்தும், சூதாடும்மன்றங்களின்,பக்கத்தும்,குற்றமில்லாத நன்மையினையும் தீமையினையும் பகுத்துணர்ந்து  பிறர் மறையை அகத்தின்கண் அடக்கமாட்டாதவரும் கள்ளுண் போருமாகிய மகளிர் உறையும் கயமையுடைய சேரியினும், தம் அழகை விற்றுண்ணும் கரிய கடையினையுடைய குளிர்ந்த  கண்ணையுடைய பூங்கொடியை ஒத்த பரத்தையர் உறையும் வளப்பமுடைய இல்லங்களினும், குதிரைக் கொட்டில்களினும் ஆடை நெய்வோர் சேரியினும், அறிவை மயக்கும் கள்ளுக்கடைகளையுடைய தெருவினும், நீராடு துறைகளிடத்தும், குளக்கரைகளினும், கூத்தர் உறைகின்ற சேரிகளினும் என்க.
 
(விளக்கம்) 55, புனைநகர்-ஒப்பனை செய்யப்பட்ட நகரம்.வரைப்பு - இடம்.
   56. கோயில் அரண்மனை; திருக்கோயிலுமாம்.வாயில் - நகரப்பெருவாயில்கள்,
   57. வம்பலர்-புதிதாகவந்தவர். அம்பலம்-பொதுமன்றம்,
   58. யானைத்தானம் - யானைகள் கட்டுங் கொட்டில்,தவப்பள்ளி - துறவோர்
  இருக்கை,
   59. தானைச்சேரி - படைமறவர் சேரி. (தான் - ஈண்டு யூகி),
   60, பாடை - மொழி, தேசிகர் - பிறநாட்டினின்றும் வந்தோர்.
   61, ஓதுநர்சாலை-கல்லுரி. ஒவா - ஒழியாமல்,
   62, சூதுபொரு கழகம் - சூதாடுகளம்,
      ''பழகிய செல்வமும் பண்புங்கெடுக்குங்
      கழகத்துக் காலை புகின்''                 (திருக் - 937)
என வள்ளுவனாரும் சூதாடுகளத்தைக் கழகம் என்றோதுதல் உணர்க .அருகல் - பக்கம்.
   63 - 64. நன்மை தீமைகளை அறிந்து மறைச்செய்தியை மனத்தடக்காதவரும், கள்ளுண்டு களிப்போருமாகிய இழிகுல மகளிர்வாழும் சேரி என்க, இவர்பால் மறைபெறல் எளிதாகலின் அச்சேரியினும் சென்றென்பது கருத்து.
   65. காரிகை பகரும்-அழகைவிற்கும்,
   66, வார்கொடி போன்ற பரத்தையர் என்க.
   67. கோடிகர்- ஆடைநெய்வோர்,
   68. மதிமயக்குறூஉம் கடையணி மறுகினும் என மாறுக ;என்றது கள்ளுக்கடையினையுடைய தெருவினும் என்றவாறு.ஈண்டும்  ஒற்றுணர்தல் எளிதாதலறிக.
   69. கூத்து ; ஆகுபெயர்; கூத்தர் என்க.