உரை
 
2. இலாவாண காண்டம்
 
8. யூகி போதரவு
 
         
     70   மனறுஞ் சந்தியும் ஒன்றுகண் டன்ன
          ஊர்முழு துள்வழிக் கார்முழு துலாஅம்
          கடுவளி வரவின் ஒடியாக் கற்பின்
          நறுநுதற் பணைத்தோள் நங்கையை நம்மிறை
          உறுவரை மார்பின் உதயணற் குள்ளத்து
     75   அருளொடும் போக்கிப் பொருளொடும் புணர்த்தமை
          யாவிரும் அறைவிர் அன்றெனின் மற்றிவன்
          காவல் அவ்வழிக் காணலெம் யாமென
          மங்கையர் நாப்பண் மறவோர் எடுத்த
          கம்பலைப் புறமொழி நண்பல கேட்டும்
 
        70 - 79; மன்றும்...,...நன்பல கேட்டும்
 
(பொழிப்புரை) (78) மறவர்கள் மகளிர் கூட்டத்திடையே நின்று ''ஒன்றனைப் பார்த்தாற்போன்ற பற்பல மன்றமும் சந்திகளும் உள்ள நீராட்டுவிழாப் பாடியின்கண், ஊர்மக்கள் அனைவரும் இருந்த செவ்வியிலே, முகில்களனைத்தும் கூடி உலாவா நிற்றற்குக் காரணமான கடிய குறைக்காற்று வீசியபொழுது கெடாத கற்பினையும் நறிய நெற்றியினையும் மூங்கில்போன்ற தோளினையும் உடைய வாசவதத்தையை நம் மன்னவன் பெரிய மலைபோன்ற மார்பினையுடைய உதயணகுமரனுக்கு மனைவியாதல் வேண்டுமென்னும் கருத்தினாலே அருளோடும் போக்கி அவளை உறுதிப் பொருளோடு கூட்டிய செயலை எல்லீரும்  அறிந்து எல்லோருக்கும் உணர்த்துங்கள். அஃதப்படியன்று   என்பீராயின், மற்று இவ்வரசனுடைய பாதுகாவலை அவ்விடத்தே யாம் கண்டிருப்பேம் அல்லமோ ! அங்ஙனம் காணாமையினாலே யாங்கள் கூறுவதே உண்மை'' என்று கூறித் தூற்றாநின்ற ஆரவாரமுடைய புறங் கூற்றினை நன்றாகப் பலவிடத்தும்  கேட்டும் என்க,
 
(விளக்கம்) உதயணன் வாசவதத்தையைக் கைப்பற்றிச் சென்றபின்னர் இங்ஙனம் ஒரு செய்தியை ஊர்முழுதும் பரப்புங்கள் என்று யூகி தன் மறவர்க்குக் கூறியிருந்தான்; அம்மறவரும் மகளிரிடையே இம்மொழியைப் பரப்பி விட்.டனர். அஃதியாண்டும் பரவிப் பேராரவாரமாயிற்று. அச்சூழ்ச்சி பலித்ததனைத் தானே நேரிற் கேட்டான் என்பது இப்பகுதியின் கருத்தாகும்,         
   இங்ஙனம் பரப்பியது அந் நகரமாந்தர்க்கும் பிரச்சோதன மன்னனுக்கும் இடையே பிளவுண்டாக்குதற் பயத்ததென்று நுண்ணிதின்  உணர்க.
   71-72. கார் முழுதும் கூடி உலாவுதற்குக் காரணமான கடுவளிவரவு என்க. கார் முழுதும் எனற்பாலதாகிய முற்றும்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது, உலாவும் - உலாவாநின்ற, கடுவளி-கடிய  சூறைக்காற்று. ஒடியா-கெடாத.
   73. நங்கையை ; வாசவதத்தையை. நம்மிறை என்றது பிரச்சோதனமன்னனை.
   74. 'உறுவரை - பெரிய மலை போன்ற.
   75. பொருள் - தன்மகட்கு உறுதியாம் பொருள். அஃதாவது-கற்புக்கடம் பூண்டுயர்தல்,
   76, யாவிரும் அறைவிர் என்றது அங்ஙனம் கூறாவிடின் அப்பழி நம்மேலதாம;் ஆதலால் இதனை வெளிப்படுத்தி அப்பழியினைப் போக்கிக் கொள்வேம் என்று மறவர் கூறினார் என்னும் கருத்துடையதென்க. அன்றெனின்-அங்ஙனமன்று என்பீராயின்,
   இனித் தமது கூற்று மெய்யென்றற்கு ஏதுக்காட்டுவார், ''யாம் மற்றிவன் காவல் அவ்வழிக் கண்டிலம் அல்லமோ'' என்றார் என்க.மன்னவன் அக்கருத்துடையன் அல்லன் எனின், அவன் தன்மகளைநன்கு பாதுகாத்திருத்தல் வேண்டும். அங்ஙனம் காவாமல் அவளை  உதயணன்பால் ஒப்புவித்தமை கண்டு தெளிமின் என்பது கருத்து.