உரை
 
2. இலாவாண காண்டம்
 
8. யூகி போதரவு
 
          பூவளங் கவினிய பொழில்உஞ் சேனை
          மாகள வனத்து மன்னுயிர் நடுக்கும்
          பணைப்பெருந் திரள்தோள் பகுவாய்க் கூரெயிற்
          றிணைப்பெருங் காதின் இலங்குகுழை அணிந்த
     105  சேடேந்து வனப்பிற் செழுமலர்த் தடங்கண்
          மோடேந் தரிவை முற்றத்து முனாது
          பனஞ்செறும் பன்ன பன்மயிர் முன்கை
          நிணம்பசை கொண்ட நீளி நெடும்பல்
          சாஅய் நீங்கிச் சார்ந்தோர் துட்கெனும்
     110   பேஎய் உருவம் பெறவகுத் தெழுதிய
          அழிசுவர் மண்டபத் தகவயின் ஆரிருள்
          வழிபடர் வலித்த மந்திரக் கோட்டியுள
 
        (101 - 112 : ஒருகாளி கோயில் வருணனை)
            101 - 112  பூவளம்.........கோட்டியுள்
 
(பொழிப்புரை) மலர் வளத்தானே அழகுற்ற பொழில்களையுடைய உஞ்சை நகரத்தின் பக்கத்தே உள்ள மகாகாள வனம் என்னும் பெயரையுடையதொரு காட்டின்கண், உயிர்களை அச்சத்தரல் நடுங்கச் செய்யும் பணைத்தபெருந்தோளினையும்,பிளந்த வாயினையும் கூர்த்த பற்களையும், இரண்டாகிய பெரிய செவியினையும், அச் செவியின்கண் ,விளங்காநின்ற குழையணியப்  பட்ட பெரிய வனப்பினையும், செழித்த தரமரைமலர் போன்ற பெரிய விழிகளையும், பெரிய உடலினையும் உடைய காடுகிழாளின்  முன்றிலின் முன்னர் உளதாகிய, பனையினது செறும்பை ஒத்த பலவாகிய மயிரையுடைய முன்கையினையும்,.நிணப்பசை கொள் நெடிய பற்களையும் உடையதும் வழிநடையானே இளைத்து வழியிளின்றும் நீங்கித தன்பால் வந்து சேர்ந்தவர். துட்கென்று அஞ்சுதற்குக் காரணமானதுமாகிய பேயுருவம் எழுதப்பட்டதும் இடிந்தசுவரையுடைய துமாகியதொரு மண்டபத்தினுள் இரவின்கண் வந்து கூடிய தம்மூர்க்குச் செல்லுதலைக் குறித்த ஆராய்ச்சியையுடைய அந் நண்பர் கூட்டத்திலே சென்றமர்ந்து என்க.
 
(விளக்கம்) 101. கவினிய - அழகுற்ற. பொழில்-சோலை, உஞ்சேனை - உச்சயினி நகரம்.
   102. மாகளவனம்; மகாகாளவனம் என்பதன் மரூஉ,
   103. பகுவாய் -பிளந்த வாய்.
   105.. சேடு-பெருமை. மலர் - ஈண்டுத் தாமரை, தடங்கண்- பெரிய கண். 
   106. மோடு -பேருருவம். அரிவை - காடுகிழாள், முனாது-முன்னிடத்ததாகிய.
   107. செறும்பு - சிலாம்பு.
   108. நீளி- நீட்சி,
   109. சாஅய்-(வழிநடையாலே)இளைத்து.நீங்கி - தம்வழியினின்றும் விலகி. துட்கு; குறிப்புச் சொல்-நெஞ்சம் துட்கென்று அஞ்சுதற்குக் காரணமான என்க.
   110. பேஎய் - பேய்.
   111. அழிசுவர்-இடிந்த சுவர்.அகவயின் -உள்ளே.
   112. வழிபடர்-ஊர்க்கு வழிக்கொள்ளுதலை.மந்திரக்கோட்டி-ஆராய்ச்சிக் குழு. அக்குழுவி லமர்ந்தென்க.