உரை
 
2. இலாவாண காண்டம்
 
8. யூகி போதரவு
 
          குடிகெழு வளமனை குழீஇய செல்வத்துக்
     150   கன்னி நன்மதிற் கடிக்கோ சம்பி
          மன்முதல் தோறுந் தொன்முதல் பிழையாது
          பெருங்கலக் கைவினைப் பேறது பெற்றுத்
          தானகந் தாங்கிய ஊனமில் செலவின்
          இட்டிடர்ப் பொழுதின் இன்ப நீக்கிக்
     155   கட்டழற் புகூஉஞ் சுட்டுறு கோல்போல்
          நட்டை யிட்டு நாட்டகந் துறந்துதம்
          பெருமகற் கொள்ளும் வெட்கையிற் போந்த
          குயமகன் இல்லங் குறுகினன் ஆகி
 
        ( யூகி ஒரு குயவன் இல்லத்தை அடைதல் )
              149 - 158 ; குடிகெழு,,,,,,குறுகினனாகி
 
(பொழிப்புரை) நற் குடிமக்கள் பொருந்திய வளப்பமுடைய இல்லங்கள் நெருங்கிய செல்வத்தினையும்,அழிவில்லாத நல்லமதிலினது காவலையும் உடைய கோசம்பி நகரத்தே உதயண மன்னன் முதல்வர் காலந்தொடங்கிப் பழமையிற் பிறழாது அரண்மனைக்கு மட்கலம் வனையும் பேற்றினைப்பெற்று அதனால் ஓரிடத்தை மேற்கொண்ட குற்றமற்ற ஒழுக்கமுடைமையோடே துன்பம் உற்ற பொழுது தன் இன்பத்தையும் துறந்து, தீயினுட் புகுதும் சுட்டுக்கோல் போன்று நட்பின் பொருட்டுத் தன் நாட்டினைத் துறந்து தம் வேந்தனைச் சிறைவீடு கொள்ளும்  அவாவினாலே அவ்வுச்சயினி நகரத்தே வந்திருந்ந ஒரு குயவனுடைய இல்லத்தை எய்தி என்க.
 
(விளக்கம்) 149, குடி, ஈண்டு நற்குடி என்பது பட நின்றது.
   150 கன்னித்தன்மையுடைய மதில் என்க; பிறரால் அழிக்கப்படாத மதில் என்றவாறு. கடி - காவல். கோசம்பி- உதயணகுமரன் தலைநகரம்.
   151.மன்முதல்-மன்னனுடைய முன்னோர.்  தொன்முதல்- தொன்மையில்.
   152. அரண்மனை அட்டிற்கலமாகலின் பெருங்கலம் என்றார். பேறது என்புழி, அது: பகுதிப்பொருளது.
   153, தானகம் -தானம்: பதவி. செல்வு-செலவு; ஒழுக்கம்.
   154. இட்டிடர் - சிறுமையுடைய துன்பம்.. நண்பனாகிய உதயணனுக்குத் துன்பம் வந்தபொழுது தன் இன்பத்தையும் துறந்து சுட்டுக்கோல் போன்று அந் நண்பனோடு தானும் அத்துன்பத்தை ஏற்றுக்கொண்டு கோசம்பியைவிட்டு உச்சயினியில் வந்திருந்த குயவன்  என்க.
   'கட்டழற் புகூஉஞ் சுட்டுறு கோல் போல்''
என்பதனோடு,
   ''சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே
    நட்டார் எனப்படு வார்''
எனவரும் நாலடி (208)யையும் நினைக.
   156. நட்டு- நட்பு; அஃதிரண்டாம் வேற்றுமையுருபேற்று ''நட்டை'' என நின்றது. நட்டையிட்டு என்றது நட்பை முன்னிட்டு என்றவாறு.