உரை
 
2. இலாவாண காண்டம்
 
8. யூகி போதரவு
 
          மூவகை யோகமுஞ் சீரமைத் திரீஇ
          எந்திர ஊர்தியொ டேனவை இயற்றி
          மந்திர மாகத் தந்தமர் உளரெனிற்
          போத்தந் தல்லது போதாய் நீயென
     190   ஆத்த வாரமோ டவன்அவண் ஒழியத
 
        186 - 190; மூவகை,....,ஒழிய
 
(பொழிப்புரை) மூன்றுவகைப் பொருள்களாற் கூட்டப்பட்ட திரியோக மருந்தினையும் சீர்செய்து வைத்துப் பின்னர் அவ் யவனர் தலைவனை நோக்கி 'நண்ப! நீ இவ்விடத்தில் எந்திரத்தேர் முதலிய கருவிகளை இயற்றிக் கொண்டிருந்து இன்னும்  இந்நகரத்தே நந்தோழர்கள் மறைவாக இருப்போர் உளராயின், அவர்களையும் நம்நகர்க்குப் போக்கியபின்னன்றிப் போகாதே கொள்' என்று கூறிப் பிணைத்த அன்பினோடே அவ் யவனர் தலைவனை அவ்விடத்தே விட்டுப் பின்னர், என்க,
 
(விளக்கம்) 186. மூவகையோகம்-மூன்று பொருள்களைக் கூட்டிச் செய்த மருந்து. சீர் அமைத்து - அவ்வவற்றிகுரிய அளவில் அமைத்து.
   187. ஏனவை - இன்னோரன்ன பிற நுண்ணியற் கருவிகளையும் என்க.
   188. மந்திரமாக - மறைவாக.
   189. போத்தந்து - போகச்செய்து.போத்தந்தல்லது போதாய் என்றது, அவரைப் போக்கிய பின்னர் நீயும் வருவாயாக என்றவாறு.
   190. ஆத்த - பிணைத்த. அவன் - அத்தலைவன். அவண் - அவ்விடத்தில்.