உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
          கருமக் காமத்துக்
          கணிகை திறவயிற் பிணிபிறர்க் குணர்த்தி
          இகழ்வொடு பட்ட புகழ்காண் அவையத்து
    105    மல்லன் மூதூர் மலிபுனல் விழவினுள்
          சில்லரிக் கண்ணியொடு சிறுபிடி ஏற்றிச்
          செயற்படு கருமத் தியற்கை இற்றென
          இப்பால் இறைமகற் போத்தந் தப்பால்
          நிகழ்ந்ததை அறிதந் தொளித்தனன் ஆகி
 
        102 - 109 ; கரும....................ஒளித்தனனாகி
 
(பொழிப்புரை)  அக்காமத்தால் உற்ற பிணியை ஒரு கணிகையின்பாற் கொண்ட காமத்தால் உற்றதெனப் பிறர் கருதும்படி செய்து இவ்விகழ்ச்சியோடே விரவிய புகழை ஆராயும் அவையினையுடைய உச்சயினி நகரத்தில் நிகழ்ந்த நீர்  விழவின்கண் அவனை வாசவதத்தையோடே பிடியானையிலேறச் செய்து இங்ஙனம் நிகழும் செயலின் உட்கிடை இஃதென அவ்வுதயணனுக்குக் கூறி அந்நகரினின்றும் போகவிடுத்துப்பின்னர் அந்நகரத்தே நிகழ்ந்தவற்றையும் அறிந்து கொண்டு மறைவாக இருந்து என்க.
 
(விளக்கம்) 102. கருமக்காமம் - பொய்க்காமம்,
    103, கணிகைதிறவயின் - கணிகைதிறத்தில் அக் காமத்தால் உண்டாய பிணி கணிகை கருமக் காமத்துத் திறத்தில் உண்டாயதாகப் பிறர் உணரும்படி செய்தென்க.
    104. இந்த இகழ்ச்சியோடே உதயணனது புகழை ஆராய்ந்து காண்கின்ற அவையினையுடைய மூதூர் என்க.
    105. மல்லல் - வளம். மூதூர் - பழைதாகிய உச்சயினி. புனல் விழவு - நீராட்டுவிழா.
    106, சிலவாகிய வரிபரந்த கண்ணையுடைய வாசவதத்தை யோடு என்க. 107.செயலுக்கு வந்துள்ள கருமத் தன்னைய அவ்வுதயணன் அறியச் செய்தென்க.
    108. இறைமகன் ; உதயணன்.
    109. அறிதந்து - அறிந்து கொண்டு. ஒளித்தனன் - ஒளித்தேன் ; தன்மை ஒருமை