உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
          வெஞ்சொல் வேட்டத் தஞ்சுவரு சீற்றத்துச்
          சலம்புரி நெஞ்சிற் சவரர் புளிஞர்
          கலந்தனர் எழுந்து கானந் தெரிவோர்
          ஊன்என மலர்ந்த வேனில் இலவத்துக்
    140    கானத் தகவயிற் கரந்தனன் இருந்த
          அரச குமரனை அகப்படுத் தார்ப்ப
 
        136 - 141 ; வெஞ்சொல்,,,,,,,,ஆர்ப்ப
 
(பொழிப்புரை)  சொல் முதலியவற்றையுடைய சவரரும் புளிஞருமாகிய வேட்டுவர் தம்முட்கூடி எழுந்து அக்காட்டினை ஆராய்ந்து வந்தனராக ; அங்ஙனம் வரும் பொழுது அதனூடே  ஓரிலவின் கீழே மறைந் திருந்த நம் அரசகுமரனை அவ்வேடர் கண்டு சூழ்ந்து கொண்டு ஆரவாரியா நிற்ப, என்க.
 
(விளக்கம்) 136 - 137 ; கேள்விக்கின்னாத வெவ்விய சொல்லினையும், வேட்டத்தினையும், பிறர்க்கு அச்சம் வருதற்குக் காரணமான வெகுளியையும் வஞ்சணையே செய்யும் நெஞ்சினையும் உடைய சவரரும் புளிஞரும் ஆகிய வேடர் என்க. சீற்றம்-வெகுளி. சலம்-வஞ்சனை. சவரர் புளிஞர் என்பன வேட்டுவர் வகை.
    138. கலந்தனர்; முற்றெச்சம். தெரிவோர் - ஆராய்வோர். ஆறுசெல்வோ ருளரோ என்றும், தமக்கிரையாகும் விலங்குகள் உளவோ என்றும் ஆராய்வோர்என்க.
    139, வேனிற் காலத்தே ஊன் போலச் சிவப்பாக மலரும் இலவம் என்க.
    140. அக்கானத் தகவயின் இலவத்துக் கரந்து இருந்த நம் மரசகுமரனை என்க. கரந்தனன்; முற்றெச்சம்.
    141. தாம் சூழ்ந்து கொள்ளுமாற்றல் தம்முட்படுத்தி மகிழ்ச்சி யாலே ஆரவாரிப்ப என்க.