உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
          மாஅல் அன்ன மன்னுயிர் காவலன்
    160    ஆட்டிடைப் பாயும் அரிமாப் போல
          வேட்டிடைப் பாய்தலை வெரீஇ யோடாப்
          பஞ்சி மெல்லடிப் பரல்வடுப் பொறிப்ப
          வஞ்சி மருங்குல் வாடுபு நுடங்க
          அஞ்சுபு நின்ற பைந்தொடி மாதரைச்
    165    சிறுவரை நடாஅய்ச் செல்லல் நீங்கக்
          கறுவுகொ ளாளர் மறுவுவந் தோடி
          உறுவுகொள் உரோணியோ டுடனிலை புரிந்த
          மறுவுடை மண்டிலக் கடவுளை வளைத்த
          கரந்துறை ஊர்கோள் கடுப்பத் தோன்றி
 
        159 - 170; மாஅலன்ன.....நோன்றி
 
(பொழிப்புரை)  திருமாலை ஒத்த உதயண குமரன் ஆட்டுக் கூட்டத்திடையே பாயாநின்ற அரிமாப்போல அவ்வேடர் கூட்டத்திடையே பாய்தலை அஞ்சி அவ்வேடர் ஓடாநின்றனராக, நம் மன்னன் ஆங்கொருசார் அஞ்சி நின்ற வாசவதத் தையை அலத்தக மூட்டிய அவளின் மெல்லடிகளிலே பருக் கைக் கற்கள் வடுவுண்டாக அழுத்தும்படியும், கொடிபோன்ற சிற்றிடை வருந்தி அசையும்படியும், அவளது துன்பம் நீங்கும் பொருட்டுச் சிறிது தூரம் நடத்திச் செல்லச் சினங்கொண்ட அவ்வேடர்; மீண்டும் ஓடிவந்து திங்கள் மண்டிலத்தை வளைத்த ஊர்கோள் போன்று சூழப்பரந்து வளைத்துக்கொண்டு நின்ற பொழுதிலே  என்க.
 
(விளக்கம்) 159. திருமால் உயிர்களைக்காத்தற் றொழில் உடையனாகலின், அத்தொழிலிலே அத்திருமாலை ஒத்தவனான நம்மரசன் என்பான் மாலன்ன மன்னுயிர் காவலன் என்றான்.
    160. ஆடு வேட்டுவர்க்கும், அரிமா உதயணனுக்கும் உவமை.
    161. வேடு-வேடர், வெரீஇ-அஞ்சி,
    162,பஞ்சி-செம்பஞ்சுக்குழம்பு. பரல்-பருக்கைக்கல்.
    163, வஞ்சி மருங்குல் - கொடிபோன்ற இடை. வாடுபு-வாடி; வருந்தி என்றவாறு.    .
    164. அஞ்சுபு - அஞ்கி. பைந்தொடி - பச்சை வளையல். மாதரை; வாசவதத்தையை. வாசவதத்தையினையும் காஞ்சனமாலை யினையும் எனினுமாம்,
    165. சிறுவரை-சிறிதுதூரம். நடாஅய் - நடத்தி. செல்லல் துன்பம், செல்லல். நீங்கச் சிறுவரை நடாஅய் என்று மாறிக் கூட்டி  நடத்தி என்னும் எச்சத்தை நடத்தா நிற்ப எனத் திரித்துக் கொள்க.  166. கறுவு -சினம், மறுவுவந்து -மீண்டு வந்து, மறுவு ஓடிவந்தென மாறுக,
    167. உறுவு-.பொருந்துதல், உரோணி-உரோகணி; வாசவதத்தைக்கு உவமை,
    168,மறுவுடை மன்டிலக் கடவுள்; திங்கள்; உதயணனுக்குவமை. மறு- களங்கம்.
    169, கரந்துறை-மறைத்துத் தங்குகின்ற. ஊர்கோள்-பரிவேடம், கடுப்ப ஒப்ப, அவர் நிரந்து நின்று என மாறுக. நிரந்து- பரவி.