உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
          வேகந் தணியா வெஞ்சின நெடுவேல்
          யூகந் தராயணன் ஒழிவிலன் கேட்டு
          முறுவல் கொண்ட முகத்தினன் ஆகிப்
          பெறுக போகம் பெருமகன் இனிதென
    205    அறுவகைச் சமயத் துறுபொருள் ஒழியாது
          பன்னுபு தெரிந்த பழியறு வாய்மொழித்
          தொன்மூ தாட்டியைத் துன்னத் தரீஇத்
          தருமத் தியற்கையுங் கருமக் கிடக்கையும்
          தலைமையது தன்மையு நிலைமையது நீர்மையும்
    210    வேறுவே றாகக் கூறுகூ றுணர்த்தி
          இதுவென் வலிப்பென அதுஅவட் குணரக்
          கூறுதல் புரிந்த குறிப்பினன் ஆகி
 
        200 -212; வேகந்தணியா,,.......குறிப்பினனாகி
 
(பொழிப்புரை)   இங்ஙனம் இடபகனாலே கூறப்பட்ட செய்தி களை யூகி ஒழிவின்றிக் கேட்டுப் புன்முறுவல் பூத்த முகத்தை உடையவனாய்ப் ''பெருமகன் இனிது போகம் பெறுக'' என்று வாழ்த்திப் பின்னர்ச் சாங்கியத்தாயைத் தன்பால் அழைப்பித்து அறத்தின் இயல்பையும்,செயல்களின் கிடக்கையையும், இறைவனது இயல்பையும், அப்பொழுதுள்ள நிலைமையினையும், தனித்தனியாக எடுத்து அவற்றைப் பாகு பாடு செய்து  பொதுவாக அறிவித்துப் பின்னர் இஃது என்னு டைய கருத்தெனத் தன் கருத்தினையும்,அவளுக்கு விளங்க அறிவித்தற்கு  விரும்பிய குறிப்புடையனாய் என்க.
 
(விளக்கம்) 201-202. வேகம்-விரைவு. வேகந்தணியா வெஞ்சினம் என்றது, ஆறாத சினம் என்றவாறு. உடையான் தன்மை உடைமை மேலேற்றப்பட்டது.
    203. யூகந்தராயணன், இது யூகியின் முழுப்பெயர்.ஒழி விலன் ; முற்றெச்சம்.
    203 மகிழ்ச்சியாலே புன்முறுவல் பூத்த முகத்தையுடையனாய் என்க,
    204 பெருமகன் இனிது போகம் பெறுக என மாறுக, இஃது உவகையாலே யூகி உதயணனை வாழ்த்தியபடியாம்.
    205-207. ஆறுவகைப்பட்ட மதங்களின் கொள்கைகளை எஞ்சாது ஆராய்ந்து தெளிந்தவளும் குற்றமற்ற மெய்ம் மொழியே பேசுபவளுமாகிய தொன்மூதாட்டியை என்க அவளாவாள் சாங்கியத் தாய் துன்னத் தரீஇ - அணுக அழைப்பித்து. தருமம்-அரசர்க்குரிய அறம். கருமம்-அரசியற்குரிய வினைத்திற்கும் தலைமை-இறைமைத் தன்மை . நிலை - அப்பொழுதுள்ள நிலைமை.                    
    210. ஓவ்வொன்றையும் வேறுவேறாக எடுத்து அவற்றையும் கூறுபடுத்து என்றவாறு.
    211 இதுவென் வலிப்பு-இஃது என் கருத்து, அவட்கு - அச் சாங்கியத்தாய்க்கு.
    212. புரிந்த-விரும்பிய,