உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
          இன்பந் துடைத்தவற் கிறைக்கடம் பூட்டுதல்
          நிங்கடன் ஆமென நினைந்துநெறி திரியா(து)
          உருப்ப நீளதர்க் கமைத்துமுன் வைத்த
          தருப்பணஞ் செருமித் தன்னுயிர் வைத்தனன்
    240    யூகி என்ப துணரக் கூறி
          நிலங்குறை பட்ட மன்னனை நிறுவுதல்
          புலந்துறை போகிய பொய்யில் வாய்மொழி
          நும்மின் ஆதல் எம்மிற் சூழ்ந்த(து) 
          அறியக் கூறினேன் யானென அவளொடும்
    245    செறியச் செய்த தெளிவினன் ஆகி
 
        236-245; இன்பந்......ஆகி
 
(பொழிப்புரை)   மேலும், நங்குருசில் அவலத்திற்குக் காரணமான இன்பத்தைக் கெடுத்து அதன் வாயிலாய் அவனுக்கு அரசுரிமைபூட்டி விடுதல் நும்முடைய தீராக்கடமையே ஆகும் என்று முகமன் கூறி, மேலும் ''வழிப்போக்கிற்கு வேண்டும் என நினைத்து முன்னரே அமைத்து வைத்த அவல் விக்கி யூகி இறந் தொழிந்தான்'' என இவ்வுலகம் அறியும்படி செய்து தன் நிலத்தை 'இழந்த நம் மன்னனை மீண்டும் அரசனாக நிலைபெறச் செய்தல் வேண்டும் என எம்முள்ளே ஆராய்ந்து துணிந்த இச் செயல் நும் மாலே முற்றுவதொன்றாகலான் யான் நீயிர் உணரும்படி கூறினேன் என்று அவளோட பொருந்தச் செய்து முடித்ததொரு தெளிவினை யுடையனாய் என்க.
 
(விளக்கம்) (222) முன்னர்க் கன்றியது கடிதற்குத் தகவில செய்தலிற் பகைவர் போலவும் என்றதற்கிணங்க (236) இன்பத்தைத் துடைத்தலாகிய தகவிலது செய்தும் என்பது கருத்து.
    236. இறைக்கடம் பூட்டுதலாவது;இறைவனுக்குரிய கடமை களை மேற்கொள்ளச் செய்தல்.
    237. நெறி ஆறுசெல்வோர், ஆற்றுணாக்கொளும் முறைமை,
    238 உருப்பம்-வெப்பம். நீளதர்க்கு- நெடிய வழியின்கண் உண்பதற்கு, நினைந்து முன் அமைத்து வைத்த எனக் கூட்டுக.
    239. தருப்பணம்-அவல். செருமி - விக்கி. உயிர்வைத்தான்- உயிர்விட்டான்,
    240. என்பது- என்னும் பொய்ச் செய்தியை. உலகம் மெய்யென்று அறியும்படி செய்து என்க.
    241. நிலங்குறைபட்ட மன்னன்- பகையரசன் கவர்ந்து,கொண்டதனால் தனது நிலப்பரப்புக் குறையப்பட்ட உதயணன். நிறுவுதல் மீண்டும் நிறைநிலமுடையனாக்கி நிலைபெறச் செய்தல்
    242. கற்றுத்துறையாகிய புலத்தையும் வாய்மொழியையும் உடைய நும்மாலே என்க. புலம்-அறிவு. வாய்மொழி- மெய்ம்மொழி எம்மில் என்றது தன் தோழரை உளப்படுத்தியவாறு.