உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
         
     250   மறைப்பிடன் அமைத்துப் புறத்தோர் முன்னர்
          ஆத்திரைத் தருப்பண மாத்திரை கூட்டி
          உண்புழி விக்கிக் கண்புகச் செருமி
          உயிர்ப்பு நீங்கிய உடம்பினன் ஆகிச்
          செயற்கைச் சாக்காடு தெளியக் காட்ட
 
        250- 254 ; மறைப்பிடன்,,,,,,தெளியக்காட்ட
 
(பொழிப்புரை)   தான் மறைந்துறைதற்குரிய இடத்தை முன்னரே அமைத்து வைத்துப் பின்னர்த் தான் யாத்திரையின் பொருட்டு வைத்திருந்த அவலை மருந்தோடு கூட்டி உண்ணும் பொழுது கண்கள் மேலிமைக்குள் புகும்படி விக்கிச் செருமி உயிர்ப்பு இல்லாத உடம்பினனாய்ப் பொய்ச் சாவினை அயலோர் முன்னர் இயற்றி அவர் அதனை மெய்யாக நம்பும்படி காட்டா நிற்ப என்க,
 
(விளக்கம்) 250. மறைப்பிடம்-தான் இறந்துவிட்டதாக நடித்த பின்னர் அயலோர் தன்னைக் காணாமல் மறைந்து வாழ்தற்குரிய இடம். 
    251. ஆத்திரை-யாத்திரை. மாத்திரை - திரியோக மருந்து.  
    252, உண்புழி- உண்ணும்பொழுது. கண் மேலிமைக்குட் புகும்படி  என்க. செருமுதல்- விக்கல் உண்டாயபொழுது உண்டாவ தோர் அவத்தை; இருமுதலுமாம்.
    253. உயிர்ப்பு-மூச்சு;பிராணன்.
    254. செயற்கைச் சாக்காடு - பொயச்சாவு.