உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
         
    255   தோழனுந் தமருஞ் சூழ்வனர் குழீஇ
          வாழலம் இழயென வஞ்ச இரக்கம்
          பல்லோர் முன்னர்க் கொள்ளக் காட்டிச்
          சுடுதற் கொவ்வாச் சூழ்ச்சி அண்ணலைக்
          கடுவினை கழூஉங் கங்கா தீரத்(து)
    260   இடுதும் உய்த்தென இசைத்தனர் மறைத்து
 
        255 - 260 ; தோழனும்....,.,,மறைத்து
 
(பொழிப்புரை)   இடபகனுஞ் சுற்றத்தாரும் யூகியின் உடம்பைச் சூழ்ந்து குழுமிக்கொண்டு ''இனி இவ்வுலகத்தே யாம் உயிர்வாழமாட்டேம்''என்று கூறி அழும் பொய்யாகிய அழுகையைப பிறர் எல்லாம் மெய்யென்று நம்பும்படி காட்டித் தீப்பெய்து சுடுதற் கொவ்வாத இவ்வமைச்சர் தலைவன் உடம்பினைக் கடிய தீவினையைப் பொக்கும் கங்கையின்இடுவேம் என்று அவ்வயலோர்க்கு  அறிவித்து அவ்வுடம்பினைப் பிறர் அறியாதபடி மறைத்துவிட்டுப் பின்னர் என்க.
 
(விளக்கம்) 255, தோழன் ; இடபகன். தமர் - சுற்றந்தார். சூழ்வனர் - சூழ்ந்து ; முற்றெச்சம். குழீஇ - கூடி. அவ்வுடம் பின்கண் உயிர்ப்புளதென்று அயலோர் அறியாமைப் பொருட்டுச் சூழ்ந்து  குழுமினர் என்பது கருத்து.
    256. வாழலம் ; தன்மைப் பன்மை. உயிர்வாழ மாட்டேம் -  யாங்களும் உயிர் விடுவோம் என்றவாறு. வஞ்ச இரக்கம் - பொய் யழுகை.
    257, கொள்ள - மெய்யென்று கொள்ளும்படி.
    258. சூழ்ச்சித் தொழிலிற் றலைமைத் தன்மையுடையொன் என்க. சூழ்ச்சியண்ணல் என்றது, சுடலாகாமைக்குக் குறிப்பேதுக்காட்டியவாறு, சான்றோர் உடம்பினைச் சுடலாகாது என்பது ஒரு வழக்கு.
    259. கடுவினை - தீவினை. கடுவினைகழூஉம் கங்காதீரத்திடுதும் என்றது, கங்கைநீரிலிடுதற்கு ஒருகாரணம் காட்டித் தெளித்தவாறு.  கங்காதீரம் - கங்கைக்கரை ; நீர்க்கு ஆகுபெயர். உய்த்து இடுதும் என மாறுக. இடுதும் ; தன்மைப்பன்மை. இடுதும் - இடுவேம். இசைத்தனர் ; முற்றெச்சம், அச்செய்தி யாண்டும் பரவும் பொருட்டுப் பிறர்க்குக் கூறி என்றவாறு.