உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
10 . யூகிக்கு விலாவித்தது |
|
45 அமிர்துகடை
கடலின் அரவம்
ஓவாது தமர்தலை
மணந்த தன்பெருங்
கோயிற் கண்ணீர்
வெள்ளங் காலலைத்
தொழுக வட்டிகை
வாக்கின் வனப்பொடு
புணர்ந்த பட்டச்
சின்னுதற் பதினா றாயிரர் 50 நும்மோய்
மார்களுந் தம்மின
மகளிரும் ஒருதுணை
ஆயமும் உடைவுகொண் டொழியப்
|
|
45
- 51 அமிர்து.......உடைவு
கொண்டொழிய
|
|
(பொழிப்புரை) அமிழ்தம் வரக்
கடையப்பட்ட பாற்கடல் போன்று இடையறாத ஆரவாரத்தோடே சுற்றத்தார் வந்து
குழுமிய அரண்மனையின்கண் . நீ பிரிந்த காலத்தே பொற்பட்ட மணிந்த
நெற்றியையுடையராகிய நின் தாயர் பதினாறாயிரவரும் அவர்
தம்மினத்தாராய மகளிரும் நின் தோழியரும் நெஞ்சுடைந்து தங்கண்ணீர்
வெள்ளமாகப் பெருகிக் காலை அலைத்து ஓடும்படி புலம்பா நிற்ப என்க.
|
|
(விளக்கம்) 45.
மந்தரமலையை மத்தாகக் .கொண்டு அமரரும் அசுரரும் திருப்பாற் கடலை
அமிழ்தெழக் கடைந்த பொழுது ஆண்டு எழுந்த ஆரவாரம் போல இடையறாது
அரண்மனையில் ஆரவாரம் உண்டாக
என்றவாறு. 46, தமர்
தலைமணந்த - சுற்றத்தாரால் குழுமப்பட்ட, பெருங்கோயில் -
அரண்மனை. 48 - 50
ஓவியப் பலகையின்கண் எழுதிய சித்திரத்தின் திருத்தத்தைப் போல
அழகமைந்த நுந்தாய்மார், பட்டமணிந்த சிறிய நுதலையுடைய நுந்தாய்மார்
எனத் தனித்தனி கூட்டுக. வட்டிகை - ஓவியப்பலகை. வாக்கு - திருத்தம்,
சின்னுதல் - சிறிய நெற்றி. நும்மோய் - நும் தாய்மார்; நும் என்றது,
அவள் உடன் பிறந்தாரையும் உளப்படுத்தியபடியாம், இனமகளிர் - அவரைச்
சார்ந்த மகளிர், 51. ஒப்பற்ற துணையாகிய
நின் தோழியரும் என்க. உடைவு - உடைதல்.
|