உரை
 
2. இலாவாண காண்டம்
 
10 . யூகிக்கு விலாவித்தது
 
          நன்னெறி நூல்வழித் திண்ணறி வாளன்
    80    வருந்தி நோற்ற அருந்தவம் போலப்
          பிற்பயம் உடைமை தெற்றெனத் தெளிந்து
          தெரிமதி யாட்டியைத் திட்பங் கொளீஇ
          அருமதி அமைச்சனை அன்பிற் கெழீஇ,த்
          தோழற் குணர்த்துஞ் குழ்வினை தொடங்கிக்
    85    கட்டளை அமைந்த கண்ணார் வனப்பினோர்
          வட்டிகைப் பலகையுள் வாக்குவகை அமைத்து
          வத்தவன் வடிவினோர் வண்ணப் பாவை
          வித்தகஞ் சிறப்ப வேறுபட எழுதி
          நாற்க ணாக அமைத்துமற் றவற்றுள்
          மேற்கண் மழுகிய வினையிற் றாகக்
    91     கைத்தொழில் அமைத்தபின் உய்த்தவட் குணர்த்தி
 
        79 - 91 : நன்னெறி.........,உணர்த்தி
 
(பொழிப்புரை) அதுகேட்ட உருமண்ணுவா என்னும் அத்திண்ணிய அறிவுடை அமைச்சன், அவ்வழற் கருமம் தவம் போலத் தொடங்கு காற் றுன்பமுடைத்தாய்ப் பின்னர்ப் பெரும்பயன் விளைவிப்பதாதலை நன்கு தெளிந்து அச்செயலை நிகழ்த்தற்கு வேண்டிய மனத்திண்மை யைச் சாங்கியத்தாய்க்கு உண்டாக்கிப் பினனர் யூகியின் சாக்காட்டை உதயணனுக்கு உணர்த்தற்கு ஆராய்ந்து துணியப்பட்ட செயலைச் செய் யத் தொடங்கி இலக்கண நூலிற் கூறப்பட்ட அளவமைந்ததோர் ஓவியப் பலகையினைத் திருத்து முறைப்படி திருத்தி அமைத்து அதன்கண் உதயணன் உருவம்போன்ற ஒரு வண்ண ஓவியம்சிறப்ப எழுதி அதனைச் சிறிது மாறுபடும்படி நான்கு கண்கள் உடையதாகவும், அவற்றுள் மேற் கண் ஒன்று மங்கிப்போனதாகவும் இயற்றி, அதனை அச் சாங்கியத்தா யிடம் கொடுத்துஅதனால் அவள் செய்யவேண்டிய செயலையும்அவட்குக் கூறிவிடுப்ப என்க.
 
(விளக்கம்) திண்ணறிவாளன் தெளிந்து, கொளீஇ, அன்பிற் கெழீஇ, தோழற்கு உணர்த்தும் வினைதொடங்கி, அமைத்து, எழுதி,அமைத்தபின் அவட்கு உய்த்து  உணர்த்த என முடிக்க,
    79, திண்ணறிவாளன் ; உருமண்ணுவா, நன்னெறி-நூல்வழி நோற்ற தவம் எனக்கூட்டுக- தவம் தொடங்குங்காற் றுன்பமாய்ப் பின்னர்ப் பேரின்பம் பயத்தலான், இச்செயலுக்கு உவமையாயிற்று,
    82. தெரிமதியாட்டி-சாங்கியத்தாய். அவள் பெண்பாலா கலின் இவ்வினை செய்தலிற்றிண்மையிலள் ஆதல் கூடுமென்பது பற்றித் திட்பம் கொளீ இயினான் என்பது கருத்து.
    83. .தானும் உதயணன்பாற் செய்யுஞ் செயலில் அன்பாலே  பொருந்தி என்க.அருமதி அமைச்சன் நிலைமையினைத் தோழற்கு உணர்த்தும் வினை என்க. அ.ஃதாவது, யூகி இறந்தொழிந் தான் என்று உதயணனுக்கு உணர்த்துஞ் செயல்.    
    85.கட்டளை-ஓவியநூல் விதி. கண்னுக்குப் பொருந்தியவனப்பென்க.
    86, வட்டிகைப்பலகை -ஓவியந்தீட்டும் பலகை. வாக்குவகை - திருத் தவகை.    
    87. வத்தவன் ; உதயணன்.
    88. வித்தகம்-ஓவியத்தொழிற்றிறம். நாற்கணாகச் சிறிது வேறுபட எழுதி என மாறுக,
    90. மேற்கண்-மேலே அமைந்த கண்.மழுகிய-மழுங்கிய. வினையிற்று - வினையை உடைத்து.
    91.அவட்கு உய்த்து - அதுகொண்டு அவள் செய்யவேண்டிய செயலை யும் உணர்த்தி என்க, உணர்த்தி என்னும் செய்தெனெச்சத்தைச் செயவெ னெச்சமாக்குக.