உரை
 
2. இலாவாண காண்டம்
 
10 . யூகிக்கு விலாவித்தது
 
         
  125   விண்தோய் கானத்து வேழ வேட்டத்துச்
       சிறைகொளப் பட்டியான் செல்சார் வறுத்தபின்
       மறைகொண் மாயமொடு துறைநகர் விழவினுள்
       ஏதின் மன்னன் காதலி பயந்த
       மாதரைத் தழீஇப் போதரப் புணர்த்துப்
  130  போதுவல் என்றோய் பொய்த்தனை யோவெனக்
       காதல் தோழனைக் காணாது  கலங்கி
 
           125 - 131 .. விண்டோய்.,.........கலங்கி
 
(பொழிப்புரை) வானுற வளர்ந்த காட்டின்கண் யான் பகைவனாலே சிறையாகப் பற்றப்பட்டுப் புகலிடம் அற்ற பின்னர், மறைவான வஞ்சகச் செயலாலே உச்சைனி நகரத்தில் மாந்தர் கொண்டாடிய  நீராட்டு விழாவிலே அம்மன்னன் மகளாகிய வாசவத்தையைக் கைப்பற்றிப் புறப்பட்டு வரும்படி செய்து நின் பின்னர் யானும் வருவேன் என்று எனக்குக் கூறினை, அக்கூற்றினைப் பொய்யாக்கினையோ என்று வாய்விட்டுப் புலம்பித் தன் தோழனைக் காணப் பெறாமையானே கலக்கமடை.ந்து என்க.
 
(விளக்கம்) 125. வேழவேட்டம்-யானை வேட்டை,
     126. செல்சார்வு - புகலிடம்.
     127, மறைவினைக்கொண்ட வஞ்சகச் செயல் என்க,நகர்துறை விழவினுள் என மாறுக. நகர் - உச்சைனி, துறை விழவு - நீராட்டுவிழா.
     128. ஏதின் மன்னன் - அயன்மையுடைய பிரச்சோதன மன்னன். கோப்பெருந்தேவி பயந்த என்பான், மன்னன் காதலி பயந்த என்றான்.
     129. மாதரை ; வாசவதத்தையை என்றாய் அம்மொழியைப் பொய்யாக்கினையோ என்க.     
     131. காதற்றோழன் ; யூகி.