உரை
 
2. இலாவாண காண்டம்
 
11. அவலந் தீர்ந்தது
 
         
     30   யானையுஞ் சுரியுளை அரிமான் ஏறும்
          மானிற் பெடையும் வாள்வரி யுழுவையும்
          புள்ளு மாக்களும் உள்ளுறுத் தியன்ற
          நொய்ம்மர நெடும்புணை கைம்முதல் தழீஇக்
          கூறா டாயமொடு குழூஉக்கொண் டீண்டி
     35   ஆறா டாயமொ டணிவிழ வமர்தல்
          இன்ன தொன்றினுள் என்னதொன் றாயினும்
          காமுறு கருமங் கால்வலை யாக
 
        30 - 37 : யானையும்............,கால்வலையாக
 
(பொழிப்புரை) யானை முதலியவற்றின் முகங்கள் போன்ற முகங்களையுடைவாய் இயற்றப்பட்ட நெடிய தெப்பங்களைத் தழுவிக்கொண்டு ஆயத்தாரோடு நீராட்டு விழா வயர்வித்தலுமாகிய இன்னோரன்ன செயல்களுள் அவன் விரும்புவதொன்றனை வலையாகக் கொண்டு என்க.
 
(விளக்கம்) 30 - 33, யானையும் அதன்பகையாகிய உளைமானும், பெண்மானும் அதன்பகையாகிய உழுவையும், இங்ஙனமே ஒன்றற்கொன்று பகையான பறவைகளும் விலங்குகளுமாகியவற்றின் முகங்கள் போன்ற முகங்களையுடையனவாகச் செய்யப்பட்ட புணைகள் என்பது கருத்து.
    30. சுரியுளை அரிமான் ஏறு -சுரிந்த பிடரிமயிரையுடைய ஆண்சிங்கம்,
    31, மானிற்பெடை -பெண்மான்.
    32. வாள்வரி உழுவை-ஒளியுடைய வரிகளையுடைய புலி. வாள்போன்ற வரி எனினுமாம். 32. மாக்கள், ஏனைய விலங்குகள் என்க.
    33. நொய்ம்மரம்- நொய்ய மரம். கைம்முதல்- கையினாலேயே; உருபுமயக்கம்.
    34, கூறாடு ஆயம்-கூறு கூறாகப்பிரிந்து விளையாடும் மகளிர் கூட்டம், அணிவிழவு-  நீராட்டணிவிழா, 
    35. அமர்தல் - விரும்புதல்; விரும்பச்செய்தல்  என்பதாம்.
    36. இன்னது, பன்மை ஒருமையின் மயங்கிற்று, இவற்றுள் என்க.
    36 - 37. இன்னதொன்றினுள் காமுறு கருமம் என்னதொன்றாயினும் கால்வளையாக என மாறுக. உதயணனைத் தம்வழிப்படுத்துங் கருவியாகலின் வலை என்றார்.