உரை
 
2. இலாவாண காண்டம்
 
11. அவலந் தீர்ந்தது
 
          மைவரை மருங்கின் மடப்பிடி சூழத்
          தெய்வ யானை நின்றது நோக்கிக்
          கண்டே நின்று காதல் ஊர்தர
          மந்திர வாய்ப்பும் வல்ல யாழின்
    115    தந்திர வகையுங் காண்பல் யானென
          எழீஇயவண் இயக்கப் பொழிமத யானை
          வேண்டிய செய்தலின் ஈண்டிய மாதவன்
          பள்ளிக் குய்ப்ப நள்ளிருட் கூறும்
          பாகர் ஏறினுந் தோற்கயி றிடினும்
    120    நீமுன் உண்ணினு நீங்குவல் யானென
          ஆகு பொருள்கேட் டறிவுற் றெழுந்து
          போதுங் காலை
 
        110 - 121 ; மைவரை..,...,.,.....போதுங்காலை
 
(பொழிப்புரை) ஒருநாள் கரியமலையினது பக்கத்திலே பிடிகள் தன்னைச் சூழாநிற்ப ஒரு தெய்வயானை வந்து நின்றதாக; அதனைக் கண்ட அளவிலே அதன்பால் நினக்கு விருப்பமிக்கதாக; யான் முனிவன்பாற் பெற்ற மந்திரவகையையும், அத்தெய்வயாழின் இசையின் வகையையும், இப்பொழுதியற்றி அவற்றின் தன்மையை அறிகுவேன் என்று துணிந்து, அம்மந்திரத்தோடே அவ்வியாழின்கண் இசையை எழுப்பி இயக்காநிற்ப, மதம்பொழியும் அத்தெய்வயானை நின்வயப்பட்டு நின் பால் வந்து நீ விரும்பியவற்றைச் செய்தலானே, அதனைப் பிரம சுந்தர முனிவர் பள்ளிக்கு அழைத்து வந்தாயாக; அவ்வியானை அன்று நள்ளிரவிலே நினது கனவின்கண் தோண்றி 'மன்னவன் மகனே! என் எருத்தத்தே நின்னையன்றிப் பாகர் ஏறினும், என்னைத் தோற்கயிற்றாலே கட்டினும், யான் உண்பதற்கு முன்னர் நீ உண்டாலும் யான் நின்னைவிட்டு நீங்குவேன்,' என்று அறிவுறுத்தாநிற்ப அவ்வியானை கூற்றாலே தோன்றிய பொருளை உணர்ந்து உறக்கங் கலைந்து நீ எழுந்து சென்றனை. இங்ஙனம் செல்லாநின்ற நாள்களிலே வைத்து என்க,
 
(விளக்கம்) 110. மைவரை - கரிய மலை; முகில்படிந்தமலையுமாம். மருங்கு - பக்கம், மடப்பிடி-இளைய பெண்யானைகள். தனது அழகானே அக்காட்டில் வாழும் பிடிகள் தன்னைக் காமுற்றுச் சூழாநிற்ப என்பது கருத்து.
    111 - 2. நோக்கி அதன் அழகைக்கண்டு  காதல் ஊர்தர என்க.
    114. மந்திரம் வாய்க்கும் தன்மையையும் யாழின் கந்திரவகை வாய்க்கும் தன்மையையும் என்க. 114. கந்திரவகை-கந்தருவ வகை. கந்வருவம் ஈண்டு இசைக்கு ஆகுபெயர், காண்பல்; தன்மை ஒருமை.
    115. எழீஇ என்னும் எச்சத்தைச்  செயவெனெச்சமாக்கி எழஇயக்க என்க,
    116. விரும்பியவற்றைக் குறிப்பாண் உணர்ந்து செய்தலின் என்றவாறு. மாதவன் - அப்பிரமசுந்தர முனிவன்.
    117. பள்ளி - தவப்பள்ளி. உய்ப்ப - செலுத்த.
    118. நள்ளிருட் கூறும் என்ற குறிப்பாலும் பின்னர் அறிவுற்று எழுந்து என்றதனாலும் அவ்வியானை கனவிற் றோன்றிக் கூறிற்று என்பது பெற்றாம். 118. பாகர் ஏறினும் என்றது, நீ மட்டும் ஏறுதலன்றி என்பதுபட நின்றது. கயிறிடினும் என்றது கட்டினும் என்றவாறு. தோற்கயிறு என்புழித், தோல் இயல்படைமொழி.
    119. நீ முன்னுண்ணினும் என்றது, என்னை ஊட்டிய பின்னன்றி என்பது பட நின்றது.
    120. ஆகுபொருள் - இக்குற்றங்கள் நிகழ்ந்தவிடத்து நிகழும் பொருள் என்க.