உரை
 
2. இலாவாண காண்டம்
 
11. அவலந் தீர்ந்தது
 
         மாதவன் ஒருமகன்
         வீயாச் செங்கோல் விக்கிரன் ஒருநாள்
         எச்சம் இன்மையின் எவ்வங் கூராத்
    125   துப்புர வெல்லாந் துறப்பென் யானெனத்
         தற்பயந் தெடுத்தவன் தாள்நிழல் வந்தோன்
         மதலை யாகுமிப் புதல்வன் யாரெனச்
         செருமிகு சீற்றத்துக் குருகுலத் தரசன்
         சாயாச் செங்கோற் சதானிகன் தேவி     
   130    ருமைசால் கற்பின் மிருகா பதியெனும்
         நுங்கை தன்னகர்க் கங்குற் கிடந்தோட்(கு)
         இன்னது நிகழ இவ்வயின் தந்த
         பொன்னணி பைம்பூட் புதல்வன் தானிவன்
         ஐயாண்டு நிறைந்தனன் ஆதலின் இவனைத்
   135    தெய்வ ஞானந் திறம்படக் காட்டித்
         தன்னகர்க் குய்ப்பென் என்றலும்
 
        121 - 135 ; மாதவன்..,.,....,உய்ப்பெனென்றலும்
 
(பொழிப்புரை) மாதவன் மகனாகிய விக்கிரன் என்னும் வேந்தன் தனக்கு மகப் பேறின்மையானே பெரிதும் வருந்தி இனி எனக்கமைந்த நுகர்ச்சி யெல்லாம் துறந்து தவஞ்செய்வேன் எனத் துணிந்து ஒருநாள் தன்னாட்டைவிட்டுத் தன்  தந்தையாகிய சேடக முனிவன் திருவடி நீழலிலே புகல் புகுவான் அங்கு வந்தானாக; அப்பொழுது அப்பள்ளியிலே அவ்விக்கிரன் நின்னைக் கண்டு தன் தந்தையை நோக்கி இச் சிறுவன் யார்? என்று வினவாநிற்ப, அச் சேடக முனிவனும் சதானிகன்  என்னும் குருகுலத்தரசன் தேவியாகிய நின் தங்கை கருவுற்றிருந்த பொழுது அவனை ஒரு சிம்புள தூக்கி வந்து இவ்விடத்தே வைத்துச் சென்ற சென்றதாக அவள் இச் சிறுவனை இப்பள்ளியிலே ஈன்றாள். இப்பொழுது இவன் ஐந்தாண்டகவையன் ஆயினன். ஆதலின், இவனைக் கற்பித்து அவன் நகரத்திற்குப் போக்கக் கருதியுள்ளேன் என்று கூற என்க.
 
(விளக்கம்) 121. மாதவன் ஈண்டுச் சேடக முனிவன்.
    122.வீயாச் செங்கோல்-கெடாத செங்கோன்மை
    123. எச்சம் - மகவு எவ்வம் - துன்பம். கூரா-கூர்ந்து; மிக்கு. துப்புரவு - துகர்பொருள். 
    125. தற்பயந்தெடுத்தவன் - தன்னைப்பெற்ற தந்தையாகிய சேடக முனிவன்.
    126, மதலை-சிறுவன்.
    127. செரு-போர். குருகுலத்திற்றோன்றிய அரசன்,
    128, சாயாச் செங்கோல் - வளையாத செங்கோல், சதானிகன் - உதயண குமரனுடைய தந்தை,
    130. நுங்கை - நுந்தங்கை. நும் என்னும் பன்மை ஏனைச் சகோதரர்களையும் உளப்படுத்தவாறு.
    131. இவ்வயின் - இப் பள்ளியின்கண்,
    132. புதல்வன்றான் என்றது, பிறனலன் என்பதுபட நின்றது.
    133. ஐயாண்டு அகவை கலை பயிற்றுதற் குரிய பருவம் என்பதுபட ஐயாண்டு நிறைந்தனன் ஆதலின் என்றார்
    134. தெய்வ ஞானம் - மெய்யறிவு.
    135. தன்னகர் என்றது, கோசம்பியை.