உரை
 
2. இலாவாண காண்டம்
 
12. மாசன மகிழ்ந்தது
 
         
     35    தேரும் வையமுஞ் சிவிகையும் பண்டியும்
           ஊரும் ஊர்தியும் பிடிகையும் உயர்வரை
           மையணி வேழமு மாவும் பண்ணி
           மடமொழி மகளிரு மைந்தரும் ஏறிக்
           கடன்மலை பெயருங் காலம் போல
     40    ............விடு தேனிற் பூநகர் புல்லென
           நீரணி பெருமலைச் சாரல் எய்தி
 
        (நகரமாந்தர் மலைச்சாலை அடைந்தது.)
              35 - 41 ; தேரும்......எய்தி
 
(பொழிப்புரை) சயந்தியிலுள்ள மகளிரும் மைந்தரும் தேர் முதலிய ஊர்திகளை ஒப்பனைசெய்து அவற்றில் ஏறிக், கடல் மலை நிலத்திலே பெயர்ந்து செல்லுமாறுபோல் அழகிய சயந்தி நகரம் பொலிவிழக்கும்படி அருவியை அணிந்த பெரிய மலைச்சாரலை அடைந்து என்க.
 
(விளக்கம்) 35.வையம் - கூடாரப்பண்டி; தண்டிகை என்னும் ஊர்தியுமாம், சிவிகை - பல்லக்கு. பண்டி - வண்டி, பிடிகை - ஒருவகை ஊர்தி,
    36 - 37. மாவும் இன்னோரன்ன ஊரும் ஊர்தியும் பண்ணிஎன மாறிக்கூட்டுக, உயர்ந்த மலையைநிகர்த்த மைபூசப்பட்ட வேழம் என்க. வேழம் - யானை. மா - குதிரை. பண்ணி - பண்ணுறுத்தி; ஒப்பனை செய்து,
    38, மடமொழி மகளிர் - மடப்பமுடைய மொழியையுடைய  மகளிர். கடல்; மக்கட்கூட்டத்திற்கு உவமை. ஊழி இறுதிக்காலத்தே கடல் ; மலை நிலத்திலே பெயர்தல்போல என்பது கருத்து.
    40. ஈண்டு ஒருசொல் விடுபட்டது. பூநகர்-பொலியுடைய  சயந்திநகர், நீர் - அருவிநீர்,