உரை
 
2. இலாவாண காண்டம்
 
12. மாசன மகிழ்ந்தது
 
         
     100    அரும்பெறற் காதலொடு அணிநமக் காகி
           மருங்குலும் ஆகமும் வருந்தப் போந்த
           கருங்கண் வெம்முலை அரும்பின் அழித்து
           வண்பொன் தட்டம் மலர்ந்த ஆதலின்
           நண்பிற் கொத்தில நம்மோ டிவையெனக்
     105    கோங்கங் குறுகல் செல்லார் அயல
           மாம்பொழிற் சோலை மகிழ்ந்துடண் ஆடும்
 
        100 - 106; அரும்பெறல்.........மகிழ்ந்துடனாடும்
 
(பொழிப்புரை) இனி  மற்றொரு பக்கத்தே ஒள்ளிய அணிகலன்களை யுடைய மகளிர் சிலர் அரும்பியும் மலர்ந்துமுள்ள கோங்க மரங்களை நோக்கி, இவை நம் பெறற்கரிய காதலோடே நமக்கு அழகாக. நம் இடையும் மார்பும் வருந்தும்படி அரும்பியகரிய கண்ணையுடைய வெவ்விய முலைகளின் அழகினைத் தமது அரும்பிய அழகானே கெடுத்து மேலும் நமது அல்குலின் அழகும் கெடப் பொன் தட்டம் போலவும் மலர்ந்தன, இங்ஙனமாகலின் இவை நம்பாற் பகையுடையன வேயன்றி நண்பிற்குப் பொருந்தின அல்ல என்று அவற்றினூடே செல்லாமல் அவற்றின் பக்கத்தே உள்ள மாஞ்சோலையுட் சென்று ஆடாநிற்ப என்க.
 
(விளக்கம்) 100-103. முலையரும்புங்காற் காதற்பண்பும் அரும்புதல் பற்றிக் காதலோடு போந்த வெம்முலை என்றார்.
    101, நமக்கு அணியாகி என மாறுக,
    102,  மருங்குல் பாரத்தானும், ஆகம் தன்னிடமெலாங் கவர்ந்து கோடலானும் வருந்தப்போந்த(முலை) என்க
    103.  அரும்பின் - அரும்பினது அழகானே என்க,
    104. வண்பொற்றட்டம்-வளவிய பொன்தட்டம். பொன் தட்டம்போல மலர்ந்து நம் அல்குலழகையும் அழித்தலானே என்பது குறிப்பு
    105. குறுகல் செல்லார் ; ஒருசொல் நீர்மைத்து; குறுகார். அயல ; பலவறிசொல். அயலிடத்தனவாகிய என்க.
    106,  பொழிற்சோலை ; இருபெயரொட்டு.