உரை
 
2. இலாவாண காண்டம்
 
12. மாசன மகிழ்ந்தது
 
           மகளிர் நாப்பண் மன்னவன் போலத்
     140    துகளணி இரும்பிடி துன்னுபு சூழ
           அந்தண் மராஅத்த பைந்தளிர் வாங்கிக்
           கண்ணயற் பிறந்த கவுளிழி கடாஅத்துத்
           தண்ணறு நாற்றந் தாழ்ப்பத் தவிர்த்துப்
           பெருமையிற் பிறப்பினும் பெற்றி போகாச்
     145    சிறுமை யாளர் செய்கை போல
           மூசுதல் ஓவா மிஞிற்றினம் இரிய
           வீசுதல் ஓவா விழுத்தகு தடக்கை
           இருங்களிற் றினநிரை விரும்புபு நோக்கியும்
 
        139 - 148. மகளிர்..,,,,,,.நோக்கியும்
 
(பொழிப்புரை) மகளிர் கூட்டத்தினிடையே மன்னவர் செல்லுதல் போலப் பிடியானைகள் தம்மைச் சூழ்ந்துவரத் தமது கவுளினின்றும் ஒழுகுகின்ற மதத்தினது மணம் வண்டுகளைப் புறம்போகாமல் தடுத்தலானே அவை அம்மதத்தின் மேல் ஒழியாதே வந்து மொய்ப்ப அத்வண்டுகள் கெட்டோடும்படி உயர்ந்த குடியிலே பிறந்துவைத்தும் தமக்கியல்பாகவுள்ள கயமைக் குணம் போகாத சிறியோர் செய்கைபோல மராமரத்தின் பசிய தளிரைக். கைக்கொண்டு வீசுதல் ஒழியாத கையினை யுடைய களிற்றியானை வரிசைகளை விரும்பிப் பார்ந்து மகிழ்ந்தும் என்க.
 
(விளக்கம்) 139. நாப்பண்-நடுவே.
    140. துகளை அணிந்துகொண்ட கரிய பெண்யானை.துன்னுபு - நெருங்கி.
    141. அந்தண் மராஅத்த பைந்தளிர் வாங்கி-அழகிய குளிர்ந்த மராமரத்தினது பசிய தளிரைக் கைக்கொண்டு.கவுளிற்பிறந்து கண்ணயல் இழி .கடாத்து என மாறுக. கடாம்-மதம்-
    143. தண்ணிய நறுமணம்,
    144. சிறுமையாளர் செய்கையாவது - பிறருக்கு ஈயாமை சிறுமையாளர், தம்மதத்தே மொய்க்கும் வண்டினத்தைக் ,கடியும் யானைக்கு உவமை. இனி உண்ணீர் உண்ணீர் என்றுபசரியார் மனையிலுண்ணுதல் சிறுமையாளர் செய்கை எனக்கொண்டு தம்மைக் கடியும் யானை மதத்திலே ஓவாது மூசும் வண்டினத்திற்கே உவமை எனினுமாம். யானைக்குப் பெருமையிற் பிறத்தல் உயர்ந்த சாதியிற் பிறத்தலையாதல் குறிஞ்சியிற் பிறத்தலையாதல். கொள்க. வண்டினத்திற்குக் கொள்ளின் தேனுண்னும் மரபிற் பிறத்தலைக் கொள்க.
    146. மூசுதல்-மொய்த்தல். ஓவா-ஒழியாத.
    148. கரிய ; களிற்றியானையினத்தின் நிரல்என்க. விரும்புபு-விரும்பி.