உரை
 
2. இலாவாண காண்டம்
 
13. குறிக்கோள் கேட்டது
 
          அரணம் வேண்டா தச்சம் நீக்கி
     10    வருணம்ஒன்றாய் மயங்கிய ஊழிச்
          சிறுமையும் வறுமையுந் தின்மையும் புன்மையும்
          இறுபும் புலம்பும் இன்மையும் இரக்கமும்
          அறியு மாந்தரின்
 
        9 - 13 ; அரணம்......மாந்தரின்
 
(பொழிப்புரை) பாதுகாவலை விரும்பாமல் தீவினைக்கு அஞ்சும் அச்சத்தையும் நீக்கிப் பால்வேறு தெரிந்த நால்வேறு வருணத்தார்களும் தம்முள் வேற்றுமையின்றிக் கூடி யொழுகுதற்குக் காரணமான இக்கலியூழியில் வாழ்வோருடைய இழிவும் வறுமையும் தீமையும் புன்மையும் இறத்தலும் துயரமும் நற்பண்பின்மையும் அருட்பண்பின் பெருமையினையும் நன்குணர்ந்த சான்றோர்போலத் தன்பால் வந்த விருந்தினர்களின் வெப்பத்தை அகற்றி நிழலளித்தற்கண் மிகுந்து என்க.
 
(விளக்கம்) 13, அறியும் மாந்தரின் (17) அழல் கண்ணகற்றி நிழல் மீக்கூரி எனக் கொண்டு கூட்டி உரைத்துக்கொள்க, தம்பால் வருபவர்க்கு அவர்தம் தகுதியை அளவாமல் அவர்தம் சிறுமை முதலியவற்றைக் கண்டு இரங்கி அவர்தம் துயர்போக்கி அவர்க்கு நலமே செய்கின்ற சான்றோர் போல அப்பொழில் தன்பால் வருவோர் தகுதியை அளவாமல் அவர்தம் அழல் கண்ணகற்றி நிழலளிப்பது என்னும் கருத்துடைய இவ்வுவமை நினைந்து நினைந்து இன்புறற் பாலதாம். இங்ஙனம் கொண்டு கூட்டாக்காற் பொருள் சிறவாமையும் நுண்ணிதின் உணர்க.
   9. அரணம் - பாதுகாவல். அச்சம் - தீவினைக்கு அஞ்சும் சீரிய அச்சம் என்க.

      'தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
      தீவினை என்னுஞ் செருக்கு' (திருக்குறள்-201)

என்னும் வள்ளுவர் மெய்ம்மொழியும் ஈண்டு நினைக.
    10. வருணம்-அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் முதலிய வகுப்பு.
    11. சிறுமை - இழிதகவு. தின்மை - தீமை. புன்மை - கீழ்மை
    12. இறுபு - இறத்தல். புலம்பு - வருத்தம். இன்மை - பண்பின்மை என்க. இரக்கம் - அருள். அருளுடைமையின் மாண்பு என்க.
  13. அறியும் மாந்தரின் - அறிகின்ற சான்றோர் போல.