உரை
 
2. இலாவாண காண்டம்
 
13. குறிக்கோள் கேட்டது
 
          அழல்கண் ணகற்றி நிழன்மீக் கூரி
          நீர்புக் கன்ன நீர்மைத் தாகி
          ஊர்புக் கன்ன உள்ளுவப் புறீஇ
     20   மலர்த்தவி சடுத்துத் தளிர்க்குடை யோங்கிப்
          பூங்கொடிக் கவரி புடைபுடை வீசித்
          தேங்கொடிப் பறவையுந் திருந்துசிறை மிஞிறும்
          விரும்புறு சுரும்பும் பெரும்பொறி வண்டும்
          குழல்வாய்த் தும்பியுங் குயிலுங் கூடி
     25   மழலையம் பாடலின் மனம்பிணி யுறீஇ
          முதிர்கனி அமிர்தம் எதிர்கொண் டேந்தி
 
        17 - 26 : அழல்,,,,ஏந்தி
 
(பொழிப்புரை) தன்கட் புகுவார்க்குக் குளத்திலே மூழ்கினாற் போன்ற குளிர்ப்பினைத் தருவதாய், தம்மூரின்கட் புகுந்தாற் போன்ற மகிழ்ச்சியை எய்துவிப்பதாய், அவ்விருந்தினர்க்கு மலரானே இருக்கைகள் அளித்தும் தளிராகிய குடைகளானே நிழற்றியும் மலர்க் கொடிகளாகிய சாமரைகளைப் பக்கமெங்கும் வீசியும், மேலும் தேனும் மிஞிறும் சுரும்பும் பொறிவண்டும் தும்பியும் குயிலும் ஆகிய தன் இசைவாணர்களானே இனிய அழகிய  பாடல்களைப் பாடச்செய்து அவ்விருந்தினருடைய நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்டு தன்பால் உள்ள முதிர்ந்த பழங்களாகிய சிறந்த உணவினையும் ஏந்தி அவரை ஊட்டியும் என்க.
 
(விளக்கம்) 17. இவ்வடி முன்னரே கூட்டப்பட்டது.
    18. நீர்மைத்தாகி - தன்மையையுடையதாகி.
    19. தம்மூரிற் புகுவோர் அங்கே தமக்கு வேண்டிய உணவு உடை உறையுள் முதலியன கிடைத்தலின் மகிழ்வரன்றே; அங்ஙனமே இப்பொழிலின்கட், புகுவாரும் உணவு முதலியன உடையராதலானே  மகிழ்வர் என்றவாறு. உறப்புறீஇ என்றும் பாடம்.    
    20. தவிசு - இருக்கை ; தளிராகிய குடை என்க.
    21. கவரி - சாமரை.
    22. தேங்கொடிப்பறவை - தேனாகிய வண்டொழுங்கு. கொடி- ஒழுங்கு. தேன், மிஞிறு, சுருப்பு, வண்டு, தும்பி என்பன வண்டுவகை.
    25. பிணியுறீஇ - பிணித்து.