உரை
 
2. இலாவாண காண்டம்
 
13. குறிக்கோள் கேட்டது
 
          வீழ்ந்த வெண்மலர் வெறுநிலம் படாது
          தாழ்ந்த கச்சைநின் தாள்முதல் தங்கலிற்
          பிரிந்த போகம் பெயர்த்தும் பெறுகுவை
     60   நிலத்துமிசை இருந்தனை ஆதலின் மற்றுநின்
          தலைப்பெரு நகரமொடு நன்னாடு தழீஇக்
          கொற்றங் கோடலு முற்றிய தாகி
          முன்னிய நின்றவை முடியந் தோன்றுமென
 
        57 - 63 ; வீழ்ந்த,..,...தோன்றுமென்று
 
(பொழிப்புரை) அம்மலர் தானும் வறுநிலத்தே வீழாமல் நினது கான்மேல் வீழ்ந்து கிடத்தலான் அங்ஙனம் பிரிந்த இன்பநுகர்ச்சியை நீ மீண்டும் எய்துவை என்பது திண்ணம்; இனி நீ நிலத்தின்மேல் இருக்கின்றனை; அதனால் நினது தலைநகரத் தோடே நல்ல நாட்டினையும் நீ மீளவும் பெறுவாய்; மேலும் நினது வெற்றியும் முற்றியதாகி எஞ்சிநின்ற நின் கருத்துக்களும் நிறைவுறும் என்பதும் நன்கு தோன்றும் (என்றார்) என்க.
 
(விளக்கம்) 57.தாழக் கட்டிய கச்சையையுடைய நின் கான் மேல் என்க
    62. கொற்றங் கோடலும் - வெற்றி கொள்ளுதற் றொழிலும் என்க.
    63. முன்னியநின்றவை - எஞ்சி நின்ற கருத்துக்கள்.