உரை
 
2. இலாவாண காண்டம்
 
14. உண்டாட்டு
 
          பைங்கொடி முல்லை வெண்போது பறித்தும்
          கத்திகை தொடுத்தும் பித்திகை பிணைத்தும்
     30   சித்திர மாகச் செந்தளிர் வாங்கிப்
          பத்திரச் சேதம் பற்பல கிள்ளியும்
          உறியோர்க் குதவுதல் செல்லா தொய்யெனச்
          சிறியோர் உற்ற செல்வம் போலப்
          பொருசிறை வண்டினம் பொருந்தாது மறக்க
     35   நறுமலர்ச் செல்வமொடு நாட்கடி கமழும
          செண்பகச் சோலைந் தண்டழை தைஇயும்
 
        28 - 36 . பைங்கொடி.............தைஇயும்
 
(பொழிப்புரை) முல்லைமலர்களைப் பறித்தும் அவற்றை மாலையாகத் தொடுத்தும் சிறு சண்பகமலரைக் கொய்து தொடுத்தும், சிவந்த தளிர்களைக் கொய்து அவற்றினைப் பற்பல சித்திரங்கள் தோன்றும்படி கிள்ளி்யும் உறவினர்க்கீயாத சிறியோர் ஈட்டிய செல்வத்தின்பால் இரவலர் போகாமைபோல வண்டுகள் பொருந்துதலை மறந்த நறிய மலராகிய செல்வத்தான் நிரம்பிப் புதுமணங் கமழாநின்ற செண்பகச் சோலையிற் சென்று அச் செண்பகத்தழைகளை ஆடையாக்கி அணிந்தும் என்க.
 
(விளக்கம்) 28. பசிய கொடியையுடைய முல்லையினது வெள்ளிய மலரைக் கொய்தும் என்க.     
    29. கத்திகை - ஒருவகை மாலை, பித்திகை - சிறுசண்பகம்.
    30. பத்திரச் சேதம் - இலைகளிற் கிள்ளுதலானே இயற்றும் உருவம்.
    31. உறியோர் - உறவோர். ஒய்யென உதவுதல் செல்லாச்செல்வம் என மாறுக. செல்வத்தை அவ்வுறவோர் பொருந்தாது மறத்தல் போல வண்டினம் சென்று தேன் நுகராமல் மறந்துவிட்ட மலரையுடைய செண்பகச் சோலை என்க. செண்பக மலரில் வண்டு மொய்யா என்பதுபற்றி இங்ஙனம் கூறினர்.
    35. நாட்கடி - புது மணம்.
    36. தைஇயும் - உடுத்தியும்.