உரை
 
2. இலாவாண காண்டம்
 
14. உண்டாட்டு
 
          பொருவில் போகமொ டொருமீக் கூறிய
     55   உருவப் பூந்தார் உதயண குமரனும்
          வள்ளியம் பணைத்தோண் முள்ளெயிற் றமர்நகை
          வாண்மணிக் கொடும்பூண் வாசவ தத்தையும்
          இயல்பிற் செய்ய வாயினும் உயர்வரை
          அருவி யாட்டினும் அறற்சுனைத் திளைப்பினும்
     60   பூங்குழை மகளிர் பொலங்கலத் தேந்திய
          தேங்கமழ் தேறலொடு தெளிமது மடுப்பினும்
          தாமரைச் செவ்விதழ்த் தலைக்கேழ் விரித்த
          காமர் நெடுங்கண் கைம்மீச் சிவப்பக்
          கனிந்த காதலொடு முனிந்து...,.,,,.,.
     65   மயக்க மாகி முயக்க மில்லாது
          பிரிவரும் புள்ளின் ஒருமையின் ஒட்டி
          வண்டார் சோலை வளமலைச் சாரல்
          உண்டாட் டயர்பவால் உவகையுண் மகிழ்ந்தென்
 
        54 - 68 ; பொருவில்,,.,,,.மகிழ்ந்தென்
 
(பொழிப்புரை) உதயண குமரனும் வாசவதத்தையும், சோலைகளையுடைய அம் மலைச்சாரலிலே இயல்பாகவே சிவந்த தம்மி தழ்கள் அருவியில் ஆடுதலானும், சுனையிலே ஆடுதலானும், தேறலோடே மதுவருந்துதலானும், மேலும் மிகமிகச் சிவக்கும்படி முதிர்ந்த காதலோடே ஊடியும்,(உணர்ந்தும்) கூடியும், பிரிவின்மையானே முயக்கமுமிலராய் இருதலைப் புள்ளின் ஓருடல் போன்று மனத்தானே ஒன்றி உவகையாலே மகிழ்ந்து உண்டு ஆடுதலைச் செய்வாராயினர் என்க.
 
(விளக்கம்) 54, பொருவு இல் போகம் - ஒப்பற்ற இன்ப நுகர்ச்சி, ஒருமீக் கூறிய-ஒப்பற்றதாகப் புகழப்பட்ட என்க.
    55. உருவம் - அழகு. 56. வள்ளி - சங்கு வளையல். பனை - மூங்கில். அமர்நகை-விரும்புதற்குக் காரணமான புன்முறுவல்.
    57. வாள் மணிக் கொடும் பூண் - ஒளியுடைய மணிகளிழைத்த வளைந்த அணிகலன்கள்,
    58. செய்யவாயினும் - சிவந்தனவானாலும்,
    59. ஆட்டினும் - ஆடுதலானும். திளைப்பினும் - ஆடுதலானும்.
    60 - 61. பொலிவுடைய குழையணிந்த ஏவன் மகளிர் பொன்வள்ளத்திலே ஏந்திக் கொணரும் தேன் மணக்கும் தேறலோடு தெளிந்த மதுவினையும் நுகர்தலானும் என்க. பொலங்கலம் - பொற்கலம். தேம் - தேன். தேறல் - கட்டெளிவு. மது - பழச்சாற்றாலே இயற்றியதொரு கள்.
    62 - 63. செந்தாமரை மலரின் சிவந்த இதழ் போன்று சிறந்த நிறத்தைப் பரப்பிய அழகிய நெடிய கண் என்க,
    64. கனிந்த காதல் - முதிர்ந்த காதல். முனிந்து - ஊடி. ஈண்டு. ஒருசீர் விடுபட்டது.    
    65. பிரிவின்மையானே முயக்கும் இன்றி என்க.
    66, பிரிவரும் புள் - இருதலைப்புள். ஒருமையின் ஒட்டி என்றது இரண்டறக் கலந்து என்றவாறு.
    67. வண்டு ஆர் சோலை-வண்டுகள் ஆரவாரிக்கும் சோலை. சோலையினையுடைய வளவிய மலைச்சாரலிலே என்க. .
    68. அயர்ப - செய்வர், உவகையுள் மகிழ்ந்து-இன்பத்துள் மகிழ்ந்தென்க.


                   14. உண்டாட்டு முற்றிற்று,