உரை
 
2. இலாவாண காண்டம்
 
15. விரிசிகை மாலைசூட்டு
 
           ஏதம் இன்றி இறைக்கடங் கழித்துக்
           காதற் பெருந்தொடர் களைதல் ஆற்றான்
     50    மாதர்த் தேவியொடு மாதவம் புரிந்த
           மன்னவ முனிவன் தன்னமர் ஒருமகள்
           அணித்தகு பேரொளி அரத்தம் அடுத்த
           மணிப்பளிங் கன்ன மாசில் வனப்பின்
           உகிரணி பெற்ற நுதிமுறை சுருங்கி
     55    நிரலள வமைத்த விரலிற் கேற்பச்
           செம்மையிற் சிறந்து வெம்மைய வாகி
           ஊன்பெறப் பிறங்கி ஒழுகுநீர் ஆமைக்
           கூன்புறம் பழித்த கோலப் புறவடிக்
     60    பரட்டின் நன்னர்ப் பாய சீறடித்
           திரட்டி யன்ன செல்வக் கணைக்கால்
           செறிந்துவனப் பெதிர்ந்த தேன்பெய் காம்பின்
           நிறங்கவின் பெற்ற காலமை குறங்கின்
     65    பையழித் தகன்ற பரந்தேந் தல்குல்
           துடிநடு அன்ன துளங்கிய நுசுப்பின்
           கொடியடர்ந் தொழுகிய கோல மருங்கின்
           புனற்சுழி அலைத்துப் பொருந்திய கொப்பூழ்
           வனப்புவீற் றிருந்த வாக்கமை அவ்வயிற்
 
        (48 - 69; விரிசிகை என்னும் ஒரு மகளின் எழில் வருணனை )
                  48 - 69. ஏதமின்றி ..................... அவ்வயிறு
 
(பொழிப்புரை) அக் காட்டின்கண் ஒரு மன்னவன் தன் அரசவுரிமையைத் துறந்துவைத்தும் அன்புத்தொடரை அறுக்க இயலாதவனாய்த் தன் மனைவியோடும் வந்து தவம் புரிந்திருந்தானாக, அம் மன்னவ முனிவனுடைய ஒரே மகள், செம்பஞ்சினை அடுத்த பளிங்கு போன்ற திருமேனி அழகினையும், நகத்தாலே அழகு பெற்றனவும் நுனி முறைய சிறுத்தனவும் ஒழுங்குபட்டனவும் இலக்கண நூலிற் கூறப்பட்ட அளவானே அமைந்தனவும் ஆகிய (கால்) விரல்களையும், அவ் விரலிற் கிணங்கச் செம்மை நிறத்தாலே சிறந்து விரும்பப்படுவனவாய்த் தசைப்பற்றுடையவாய் ஒளி வீசி, ஆமையினது புறத்தினைப் பழியாநின்ற புறவடியினையும், அப்புறவடியின் தன்மைக்குப் பொருந்த இந்திரகோபத்தை ஒத்த பரட்டினையும், பரவிய சிற்றடிக் கேற்பத் திரட்டினாற்போன்றனவும் தேன் பெய்த மூங்கிலை ஒத்தனவும் ஆகிய கணைக்காலினையும், நிறத்தாலே அழகுற்ற அக்கால் களுக்குப் பொருந்திய துடைகளையும், அழகானே பாம்பின் பணத்தை அழித்து அகன்று பரந்துயர்ந்த அல்குலினையும், உடுக்கையின் நடுவினை ஒத்த அசையாநின்ற நுசுப்பினையும், பூங்கொடியை வென்று நீண்ட அழகிய இடையினையும், நீர்ச்சுழியை வருத்தி நூலிற்குப் பொருந்திய கொப்பூழினையும், திருத்தமமைந்து அழகு குடியிருந்த வயிற்றினையும் என்க.
 
(விளக்கம்) 48. ஏதம்-குற்றம். தன் தவவொழுக்கத்திற்குக் குற்றம் நேர்தலின்றி என்க. இறைக்கடம் - அரசவுரிமை. கழித்தும் எனற்பாலதாகிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.
    49. காதற் பெருந்தொடர் - அன்பு செலுத்துதற்குக் காரணமாகிய பெரிய தொடர்பு. எனவே, மனைவி மக்களாகிய அன்புத் தொடர்புடையாரைத் துறக்க இயலாதவனாகி என்றாராயிற்று.
    50. மாதர்த்தேவி-அழகிய மனைவி. மனைவியுந் தவம்புரிந்தமை தோன்றத் தேவியொடு மாதவம் புரிந்த முனிவன் என்றார்.
    51. மன்னவமுனிவன் -மன்னவர் மரபிற் பிறந்தவனாகிய முனிவன். அமர் ஒருமகள் - பெரிதும் விரும்புதற்குக் காரணமான ஒரே மகள்.
    52. அழகு தக்கிருக்கின்ற பெரிய ஒளியினையுடைய மணிப்பளிங்கு, அரத்தம் அடுத்த மணிப்பளிங்கு எனத் தனித்தனி கூட்டுக, அரத்தம்-செம்பஞ்சு, மணிப்பளிங்கு; பண்புத்தொகை. பளிங்கு தன்னயலே உள்ள பொருளின் நிறத்தை ஏற்று எதிரொளிவிடும் தன்மையுடையது ஆகலின், மாசின்மைக்கும் ஒளியுடைமைக்கும் நிற முடைமைக்கும் உவமையாக அரத்தம் அடுத்த பளிங்கு என்றார், வனப்பு - ஈண்டுத் திருமேனியின் வனப்பு என்க,
    54.  உகிர் - நகம். ஒன்றற்கொன்று நுதி முறையே சிறுத்தென்க,
    55. அமைத்த-அமைந்த, இனி அமைந்த நிரல் அளவு விரலின் எனமாறி அழகு நூலிற் கூறப்பட்ட ஒழுக்கும் அளவும் உடைய விரலினையும் எனினுமாம்.
    56..  வெம்மைய - விரும்புதற்கிடமான என்க.
    57.  ஊன்பெற-தசைத்திரட்சியைப் பெறுதலானே, பிறங்கி - ஒளிவீசி. கோலம் - அழகு.
    59,  அடிமையின் .அவ்வடியின் செம்மைக்கேற்ப என்க. கோபம் - இந்திரகோபப் புழு,
    60, நன்னர்ப் பாய சீரடிக்கேற்பத் திரட்டினாற் போன்றனவும்  தேன்பெய் காம்புபோன்றனவுமாகிய நிறம் கவின் பெற்ற செல்வக் கணைக்கால் என்க.
    61, திரட்டியன்ன - திரட்டிச் செய்தாற் போன்ற.
    62. தேன்பெய்காம்பு - தேன் பெய்துவைக்கும் மூங்கிற்றுண்டு.. 'தேனெய்பெய் வாடாத காம்பேபோற் கணைக்காலின் வனப் பினவே. (சீவக - 176.) என்றார் பிறரும்.
    63. அக்கணைக்காலுக்கு  அமைந்த குறங்கினையும் என்க.  குறங்கு - துடை.
    64.கைவரை நில்லாக் கடுஞ்சின அரவு - தன் வயத்திலே நில்லாமற் கிளர்ந் தெழாநின்ற கடிய வெகுளியையுடைய பாம்பு 65. பை- பணம் (படம்).
    66. துடிநடு- உடுக்கையின் நடுப்பகுதி. நுசுப்பு-இடையின் நடுப்பகுதி,
    67. கொடி-பூங்கொடியை வென்று. ஒழுகிய - நீண்ட மருங்கு -இடை.
    68. புனற்சுழி - நீர்ச்சுழி. இதுகொப்பூழுக்குவமை.
    69. வனப்பு-அழகு, வாக்கு-திருத்தம், வயிற்றினையும் அவ்வயிற்றின்மேல் உள்ள ஆகத்து என இயைக்க,