உரை
 
2. இலாவாண காண்டம்
 
16. ஊடல் உணர்த்தியது
 
         
     20   உருத்தரி வெம்பனி ஊழூழ் சிதரி
          விருப்புமறைத் தடக்கி வேக நோக்கமொடு
          பனிப்பிறை அழித்த படுமைத் தாகிய
          அணித்தகு சிறுநுதல் அழன்றுவியர் இழிய
          உருவ வானத் தொளிபெறக் குலாஅய
     25   திருவில் அன்ன சென்றேந்து புருவம்
          முரிவொடு புரிந்த முறைமையிற் றுளங்க
          இன்பம் பொதிந்த ஏந்தணி வனமுலை
          குங்குமக் கொடியொடு குலாஅய்க் கிடந்த
          பூந்தா தொழுக்கஞ் சாந்தொடு திமிர்ந்து
     30   தளிர்ப்பூங் கண்ணியுந் தழையும் வீசியிட்
          டொளிப்பூந் தாமம் உள்பரிந்து சிதறி
 
        20 - 31 ; உருத்து......................சிதறி
 
(பொழிப்புரை) மேலும் வெவ்விதாக அரித்து வீழாநின்ற கண்ணீரை முறை முறையே சிந்தித் தனது விருப்பத்தைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு சினந்த பார்வையோடே பிறையைப் பழித்த தன் சிறிய நெற்றியினின்றும் வியர்வை துளியா நிற்பவும், புருவம் நெரிந்து வளைந்து அசையா நிற்பவும் தனது அழகிய முலையின் மேற்கிடந்த தொய்யிற் கொடியினையும் பூந்தாதுக்களையும் சந்தனத்தையும் அழித்துத் தான் ஏந்தி வந்த கண்ணியையும் தழைகளையும் வீசிவிட்டு ஒளியுடைய மாலைகளையும் அறுத்துச் சிதறிவி்ட்டு என்க.
 
(விளக்கம்) 20. வெதும்பி அரித்துவிழா நின்ற வெவ்விய கண்ணீர்த் துளி முறையே முறையே சிதறா நிற்ப என்க. உருத்து - வெதும்பி. துன்பக் கண்ணீர் ஆகலின் வெம்பனி என்றார்.   ஊழ்- முறை,
   21. விருப்பு - தன்னுடைய விருப்பத்தை. வேகம் சினம்.
   22 - 24. குளிர்ந்த பிறையினது அழகினை அழித்த   உருவத்தையுடையதாகிய அழகு தக்கிருக்கின்ற சிறிய நெற்றி   சினத்தலானே வியர்வு தோன்றித் துளியா நிற்ப என்க. முதலில்   அழற்சியைச் சினை மேலேற்றிக் கூறியது. (24 - 26) அழகிய   வானத்தின்கண் ஒளியுற வளைந்து கிடந்த இந்திர வில்லை ஒத்த   நீண்டுயர்ந்த புருவம் நெரிப்போடு முறை முறையே அசையா   நிற்ப என்க.
   27. இன்பத்தைத் தம்மகத்தே பொதிந்து கொண்டுள்ள ஏந்திய  அழகிய முலைகளின்மேல் எழுதப்பட்ட என்க,
   28. குங்குமத்தாற் கொடியுருவமாக எழுதப்பட்ட   தொய்யிலுடனே என்க. குலாஅய்க் கிடந்த - வளைந்து கிடந்த,
   29, பூந்தாதினை ஒழுகவிட்ட ஒழுக்கம் என்க. சாந்து   - சந்தனம். திமிர்ந்து - தேய்த்து (துடைத்து) என்க.
   30. தான் ஏந்திவந்த கண்ணியையும் தழையையும் விசி  விட்டு என்க,
   31, ஒளியுடைய மலர்களையும் அறுத்துச் சிதறி என்க,   உள்பரிந்து - அவற்றின் அகத்தே அறுத்து என்றவாறு. பரிந்து - அறுத்து.   இனி உள்பரிந்து என்பதற்கு மனம் வருந்தி என்பாருமுளர்,