உரை
 
2. இலாவாண காண்டம்
 
16. ஊடல் உணர்த்தியது
 
          முழுநீர்ப் பொய்கையுட் பொழுதொடு விரிந்த
          செழுமலர்த் தாமரைச் செவ்விப்பைந் தாது
          வைகல் ஊதா வந்தக் கடைத்தும்
     35   எவ்வந் தீராது நெய்தற் கவாவும்
          வண்டே யனையர் மைந்தர் என்பது
          பண்டே யுரைத்த பழமொழி மெய்யாக்
          கண்டேன் ஒழிகினிக் காமக் கலப்பெனப்
          பிறப்பிடைக் கொண்டுஞ் சிறப்பொடு பெருகி
     40   நெஞ்சிற் பின்னி நீங்கல் செல்லா
          அன்பிற் கொண்ட ஆர்வ வேகமொடு
          நச்சுயிர்ப் பளைஇ நண்ணல் செல்லாக
 
         32 - 42 ; முழுநீர்....................செல்லாள்
 
(பொழிப்புரை) நீர்நிலையின்கண் விடியற்காலத்தே மலராநின்ற செழிய தாமரை மலரினது செவ்வியுடைய பசிய தாதினை நாள்தோறும் நுகர்ந்து வந்தவிடத்தும், தனது வேட்கை அடங்காமல் புல்லிய நெய்தற் பூந்தாதினையும் விரும்பாநின்ற அவ்வண்டினையே ஒப்பர் ஆடவர் என்பது பழங்காலத்தே சான்றோர் கூறிய பழமொழியே அன்றோ! அம்மொழியின் பொருளை யான் இப்பொழுது கண்கூடாக உணரா நின்றேன். இனி இவனோடு காமத்தாற் கூடும் கூட்டமும் ஒழிவதாக என்று கூறிப் பிறந்தநாள் தொடங்கி நாளுக்குநாள் சிறப்பாகப் பெருகி நெஞ்சின்கட் பின்னி நீங்குதல் இல்லாத அன்பினாலே கொண்ட ஆர்வ வேகத்தோடே நச்சுயிர்ப்பெறிந்து அவ்வுதயணன்பாற் செல்லாதவளாயினாள் என்க.
 
(விளக்கம்) 32. முழுநீர்ப் பொய்கையுள் - நிறைந்த நீரையுடைய நீர்நிலையின்கண் தோன்றி என்க, இது தன் குலமாண்பு கருதிக் கூறியது.   பொழுது வைகறைப் பொழுதென்க.
   33, செழித்த தாமரை மலரினது புதிய பசிய தாதினை என்க,
   34. வைகலும் எனற்பாலதாகிய உம்மை செய்யுள் விகாரத்தால்  தொக்கது, நாள்தோறும் என்க. ஊதா - ஊதி. வந்தக் கடைத்தும் - வந்தவிடத்தும்.
   35. எவ்வம் - வேட்கைத் துன்பம். நெய்தல் - ஒருநீர்ப்பூ. நெயல  என்புழி, புல்லிய நெய்தல் என்பதுபட நின்றது.
   37. பண்டே - பழங்காலத்திலேயே.
  'பெண்டிர் நலம் வௌவித் தண்சாரற் றாதுண்னும் வண்டிற்றுறப்பா  மலை'' (கலி - 40 ; 23 - 4)  என்றும் தாதுண் வேட்கையிற் போது தெரிந்தூதா  வண்டோரன்ன வவன்' (நற், 25;9. 10) என்றும், 'கன்னி நறுந்தேறன் மாந்திக  கமலத்தின் மன்னித்துயின்ற வரிவண்டு பின்னையும் போய் நெய்தற் கவாவு  நெடுநாட்' (நளவெ - கலிநீங்கு 51.) என்றும் பிறசான்றோர் கூறுவனவற்றையும்   ஈண்டு நினைக,
   39, சிறப்பொடு பெருகிஎன்றது ஒருகாலைக்கொருகாற் பெருகி  என்றவாறு.
   41, ஆர்வவேகம் - விருப்பத்தின் மிகுதி,
   42, நச்சுயிர்ப்பு - நஞ்சு போன்ற கொடியபெருமூச்சு, நண்ணல்செல்லாள்   - நண்ணாளாய்,