உரை
 
2. இலாவாண காண்டம்
 
16. ஊடல் உணர்த்தியது
 
           நாணொடு மிடைந்த நடுக்குறு மழலையள்
           காம வேகம் உள்ளங் கனற்றத்
      90   தாமரைத் தடக்கையின் தாமம் பிணைஇ
           ஆத்த அன்பின் அரும்பெறற் காதலிக்கு
           ஈத்ததும் அமையாய் பூத்த கொம்பின்
           அவாவுறு நெஞ்சமொடு கவான்முதல் இரீஇத்
           தெரிமலர்க் கோதை திகழச் சூட்டி
      95   அரிமலர்க் கண்ணிநின் அகத்தனள் ஆக
           அருளின்நீ விழைந்த மருளி நொக்கின்
           மாதரை யாமுங் காதலெம் பெரும
           பொம்மென் முலையொடு பொற்பூண் நெருங்க
           விம்ம முறுமவள் வேண்டா முயக்கெனப்
      100   பண்ணெகிழ் பாடலிற் பழத்திடைத் தேன்போல்
           உண்ணெகிழ்ந்து கலவா ஊடற் செல்வியுள்
 
        88 - 101 ; நாணொடு.....................செவ்வியுள்
 
(பொழிப்புரை) அவ்வுதயணனை நோக்கி நாணங் கலந்த நடுங்காநின்ற மழலைமொழியாலே, ' பெருமானே ! காமவேகம் நின் நெஞ்சத்தைக் கனற்றலானே நின் தடக்கையாலே மாலைபுனைந்து பெறற்கரிய நினது புதிய காதலிக்கு அளித்தனை; அத்துணையின் ஒழியாது, மேலும் அவாவாநின்ற நெஞ்சத்தோடே அவளை நினது தொடையின்மேல் இருத்தி அம் மலர்க்கோதைகளை விளக்கமாகச் சூட்டவும் சூட்டினை; ஆகவே, தாமரை மலர்போன்ற கண்களையுடைய அப்புதுவோள் நின்நெஞ்சின் கண்ணே வீற்றிருக்கின்றாள் என்பதுணர்ந்து கொண்டேன். ஐயா! அருளுடைமையானே இங்ஙனம் நின்னால் விரும்பப்பட்ட மருண்ட நோக்கமுடைய அவ்வழகியை யாமும் பெரிதும் விரும்பா நின்றேம், பொம்மெனப் பருத்த இம்முலை யொடு பூண்களும் நெருங்கும்படி நீ முயங்காநின்ற இப்பொய்மை முயக்கம் யாம் வேண்டுகிலேம்; இதனை நின்னெஞ்சுறையும் அக்காதலியுணரின் பெரிதும் விம்மி வருந்துவாள் அல்லளோ! 'என்று கூறிப் பண்ணிடை நெகிழும் பாடல் போன்றும், பழத்திடை நெகிழும் சாறுபோன்றும் உள்ளம் கசிந்து கலக்காமற் பின்னும் ஊடாநின்ற அவ்வமையத்தே என்க.
 
(விளக்கம்) 88. நாணொடு மிடைந்த - நாணத்தோடு கலந்த. மழலையள் - மழலை மொழியுடையளாய்,
    89, காமத்தினது விரைவுத்தன்மை, கனற்ற - கனலச் செய்ய,
    90, தாமரை ; ஆகுபெயர், தடக்கை - பெரிய கை. தாமம் - மாலை.   பிணைஇ - பிணைத்து.
    92. ஆத்த - யாத்த ; பிணித்த, பூத்தகொம்பின் (94) கோதைதிகழச்   சூட்டி என இயைக்க. (92) காதலிக்கு ஈத்ததும் அமையாய்!மேலும், அவள்   கொம்பிற் றிகழக் கோதையும் சூட்டினை என உம்மை விரித்தியைத்துக் கொள்க.
    94. சூட்டவும் சூட்டினை ஆதலானே என விரித்தோதுக.
    95, அரிக்கண்ணி, மலர்க்கண்ணி, என்று தனித்தனி கூட்டுக. அரி - வரி. மலர் - ஈண்டுத் தாமரைமலர். அகத்தனள் - நெஞ்சிலுறைவாள்.
    96. அருளின் - அருளுடைமையானே, மருளி - மருட்சியையுடைய.
    97. காதலெம் ; தன்மைப் பன்மை.
    98, விம்மம் - விம்முதல், இம்முயக்கு வேண்டா என மாறுக. முயக்கு என்றது, இப்பொய்மை முயக் கென்பதுபட நின்றது.100. பண்ணினின்றும் நெகிழும் பாடல் போன்றும் பழத்திடை நெகிழும் சாறுபோன்றும் உள்ளத்தினின்றும் நெகிழாநின்ற   அன் பாலே கலத்தலைச் செய்யாமல் என்றவாறு.