உரை
 
2. இலாவாண காண்டம்
 
16. ஊடல் உணர்த்தியது
 
         
     110   இன்னதென் றுணரா நன்னுதல் நடுங்கி
          அழல்கதிர் பாப்பி உழல்சேர் வட்டமொடு
          நிழலவிர் கதிர்மதி நிரந்துநின் றாங்குத்
          திலகத் திருமுகஞ் செல்வன் திருத்தி
          ஒழுகுகொடி மருங்குல் ஒன்றா யொட்டி
     115   மெழுகுசெய் பாவையின் மெல்லியல் அசைந்து
          மன்னவன் மார்பின் மின்னென ஒடுங்கி
          அச்ச முயக்க நச்சுவனள் விரும்பி
          அமிழ்துபடு போகத் தற்புவலைப் படுத்த
          மாதரை மணந்த தார்கெழு வேந்தன்
 
        [ அக் குரங்கினைக் கண்டஞ்சிய வாசவதத்தை ஊடல் தீர்தல் ]
                110 - 119 ; இன்னது......................மாதரை
 
(பொழிப்புரை) இஃதின்னதாம் என்று நன்னுதல் உணராதவளாய் மெழுகானியன்ற பாவைபோன்று உருகி மெலிந்து ஞாயிற்று மண்டிலத்தோடே திங்கள் மண்டிலம் சேர்ந்தாற் போன்று நெடிய பூங்கொடி போன்ற தன்னிடை மிகவும் பொருந்த உதயணகுமரன் மார்பின்கண் ஒடுங்கி, அச்சந்தலைக்கீடாய் வந்த அத்தழுவுதலைப் பெரிதும் விரும்பாநிற்ப அமிழ்தத் தன்மையுடைய அந்நுகர்ச்சியாலே வேந்நன் தன் அன்புவலையுட் படுத்தப் பட்ட அவ்வாசவதத்தையை என்க.
 
(விளக்கம்) 110, இஃதின்னது என்று உணராத வாசவதத்தை என்க.
    111 - 112. கொதியாநின்ற கதிர்களை வானத்தே பரப்பிச் செல்லும்   செலவையுடைய ஞாயிற்றுமண்டிலத்தோடு ஒளி விரிக்கும் குளிர்ந்த   கதிர்சேர் திங்கள்மண்டிலம் கூடி, நின்றாற்போல என்க. இவற்றுள் ஞாயிறு உதயணனுக்கும், மதி வாசவதத்தைக்கும் உவமை. நிரந்து - கூடி,
      'சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை, 
      நேரா நிரந் தவர் நட்பு'      (குறள் - 821)
  என்புழியும் அஃதப் பொருட்டாதல் உணர்க.
    113, திலகம் - பொட்டு. செவ்வன் - செவ்வையாக.
    114, ஒழுகு கொடி - ஓடுகின்ற(படர்கின்ற) கொடி. மருங்குல் - இடை.
    115. மெழுகாற் செய்த பாவைபோல அசைந்து என்க. அசைந்து - மெலிந்து. மெல்லியல் ; வாசவதத்தை,
    116, மன்னவன் ; உதயணகுமரன். மின்னென - மின்னல்போல,
    117. அச்சந் தலைக்கீடாய் வந்த முயக்கம் என்க, நச்சுவனள் ; முற்றெச்ச.  நச்சுவனள் விரும்பி - மிகவிரும்பி,
    118, அமிழ்துபடு போகம்-அமீழ்தத்தன்மை தோன்றாநின்ற நுகர்ச்சி.
     'உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்(கு)
       அமிழ்தின் இயன்றன தோள்'
  எனவரும் அருமைத் திருக்குறளையும் (1106) ஈண்டு நினைக. அற்புவலை - அன்பாகிய வலை.