|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 17, தேவியைப் பிரித்தது | | தவமுது
மகளைத் தக்கவை காட்டி
உயர்பெருங் கோயிலுள் தேவியை ஒழியா
நிலாமணிக் கொடும்பூண் நெடுந்தகைக் குருசிலை
உலாவெழப் போக்கி ஒள்ளழல்
உறீஇயபின் 15 இன்னுழித்
தம்மினென் றன்னுழி அவளொடு
பின்கூட் டமைவும் பிறவும்
கூறிக் கன்கூட் டெய்திக்
கரந்தனன் இருப்ப
| | 11 - 17 :
தவமுதுமகளை......................கரந்தன்னிருப்ப
| | (பொழிப்புரை) அச்
சாங்கியத் தாய்க்கும் தகுந்த எடுத்துக் காட்டுக் களைக் காட்டி அறிவுறுத்தி
அரண்மனையகத்தே வாசவதத்தையைப் பிரியமாட்டாத குருசிலை உலாப்போகும்படி
செய்வித்து அவ் வரண் மனையின்கண் தீக்கொளுவிப் பின்னர் வாசவதத்தையை
அழைத்துவந்த இன்னவிடத்தே என் முன்னிலையில் கொணர்ந்து தம்மின்
என்றுகூறி, பின்னரும் அவளை எய்திய அவ்விடத்தே நிகழவேண்டிய
நிகழ்ச்சி களையும் பிற நிகழ்ச்சிகளையும் எடுத்துக்கூறி, அவளை அவ்வழிப்
போக்கிய பின்னர்த் தான் கற்களைக் கூட்டியியற்றிய மறைவிடத்தே
புகுந்து மறைந்திருந்தானாக இங்ஙனமிருப்ப என்க.
| | (விளக்கம்) 11 -
தவமுதுமகள் - சாங்கியத்தாய். தக்கவை - தகுந்த நீதிகளை, அவையாவன
;- ''அற்றங்காத்தலின் ஆண்மைபோலவும்................இனையன
பிறவும் இனியோர்க் கியன்ற படுகடன்'' என்க. 9. ஆம் காதையில் வருவன
போல்வன என்க. 12, உயர்ந்த பெரிய
அரண்மனையின் கண் என்க. தேவி ; வாசவதத்தை. 13,
ஒளிவிடும் மணிகளிழைக்கப்பட்ட வளைந்த அணிகலன்களையும் நீண்ட புகழினையும்
உடைய தலைவனாகிய உதயணகுமரனை என்க, தகை-ஈண்டு புகழாற் பெற்ற தகுதி என்க,
குருசில் தலைவன். 14. ஒள்ளழல்-ஒளியுடைய
நெருப்பு. 15.இன்னுழி -இன்ன இடத்தே. தம்மின் -தாருங்கள்.
என் முன்னிலையிற் கொணர்ந்து தருக என்பது கருத்து.
அன்னுழி அவளொடு பின் கூட்டு அமைவும் - அவ்விடத்தே அவ் வாசவத்த்தையோடு
பின்னர் நிகழ்த்த வேண்டிய நிகழ்ச்சியும் என்க. அன்னுழி -
அவ்விடத்தே. ''அன்னுழி உமையவள் அகத்துள் ஓர் செயல்'' என்பது
கந்தபுராணம் (பார்ப்பதி-1). கற்கூட்டெனற்பாலது எதுகை நோக்கி மெலிதல்
விகாரமெய்திக் கன்கூட்டு என நின்றது. கல்கூட்டு -கல்லைக் கூட்டிச் செய்த
தொரு மறைவிடம் என்க, கரந்தனன் ; முற்றெச்சம்.
|
|