உரை
 
2. இலாவாண காண்டம்
 
17. தேவியைப் பிரித்தது
 
           மந்திர நாவின் அந்த ணாட்டி
           தேருடை மன்னர் திறல்படக் கடந்த
     20    போரடு குருசிலைப் பொழுதிற் சேர்ந்து
           வரையுடைச் சாரலில் வரூஉங் குற்றத்(து)
           உரையுடை முதுமொழி உரைத்தவற் குணர்த்தித்
           தோற்கை எண்குங் கோற்கைக் குரங்கும்
           மொசிவாய் உழுவையும் பசிவாய் முசுவும்
     25    வெருவு தன்மைய ஒருவயின் ஒருநாள்
           கண்ணுறக் காணிற் கதுமென நடுங்கி
           ஒண்ணுதன் மாதர் உட்கலும் உண்டாம்
           பற்றார் உவப்பப் பனிவரைப் பழகுதல்
           நற்றார் மார்ப நன்றியின் றாகும்
     30    இன்னெயிற் புரிசை இலாவா ணத்துநின்
           பொன்னியல் கோயில் புகுவது பொருளென
 
              (சாங்கியத்தாயின் செயல்)
            18 - 31 ; மந்திர,,,,,,.,,,,,பொருளென
 
(பொழிப்புரை) இனிச் சாங்கியத்தாய், ஈண்டு மலைச்சாராலிலே விளையாட்டு விரும்பிப் பொழுது கழியாநின்ற   உதயணகுமரனைத் தக்கதொரு செவ்வியிலே அணுகி மலைச்சாரலிலே உறைவார்க்கு வருங்குற்றங்களைப் பழைய கதைகள் வாயிலாய்க் காட்டி அறிவுறுத்தி மேலும் நற்றார் மார்ப!  கரடி முதலிய கொடிய காட்டு விலங்குகளை என்றேனும்  ஒருநாள் வாசவதத்தை காணநேரின் அஞ்சி நடுங்கவும் நேரும்; ஆதலால் நமது பகைவர்க்கு மகிழ்ச்சி உண்டாகும்படி யாம் இம்மலைச்சாரலில் உறைதல் நன்மையில்லாததொரு செயலாகும்.யாம் நின்னுடைய இலாவாண நகரத்துள்ள பொன்னாலியன்ற அரண்மனைக்குச் சென்று உறைதல் நன்றாகும் என்று கூற என்க.
 
(விளக்கம்) 18. மந்திர நாவின் அந்தணாட்டி - இடைறாது மந்திரம் மிழற்றா நின்ற செந்நாவினையுடைய பார்ப்பனியாகிய சாங்கிய மகள் என்க,
    19-20, தேர் முதலிய படைப் பெருக்கமுடைய பகைமன்னர் வலிமை கெட வென்ற போர்த் தொழிலையுடைய உதயணகுமரனைத் தக்க செவ்வியில் அணுகி என்க.
    21-22. மலையினது சாரலில் உறைவார்க்கு வருகின்ற குற்றங்களைக் கூறாநின்ற பழங்கதைகளை எடுத்துக் கூறி என்க.
    23. தோற்கை எண்கு -உறுதியான தோலாலமைந்த கையினையுடைய கரடி, தோல் என்பது உறுதியான தோல் என்பதுபட நின்றது, கை என்றது ஈண்டு முன்னங்கால்களை, கோற்கைக் குரங்கு-கோல் போன்ற நெடிய கையினையுடைய  குரங்கு,
    24, மொசிவாய் உழுவை -ஈக்கள் மொய்த்தற்குக் காரணமான புலானாற்ற முடைய வாயினையுடைய புலி. பசிப்பிணி வாய்த்த கருங் குரங்கென்க.
    25, கண்டோர் அஞ்சும் தன்மையையுடையனவாகிய விலங்குகளை என்க, ஒருவயின் ஒருநாள் - யாண்டேனும் ஓரிடத்தே என்றேனும் ஒருநாள் காணநேரின் என்க
    26. கண்ணுற- எதிர்ப்பட.
    27, ஒண்ணுதல் மாதர் - ஒளியுடைய நெற்றியினையுடைய வாசவதத்தை. உட்கல்-அஞ்சுதல்,
    28.பற்றார் உவப்ப -பகைவர் மகிழும்படி. நமக்குத் தீங்கு நேரின் நம் பகைவர் மகிழ்வர் ஆதலின் அவர் மகிழ்தற்குக் காரணமான இவ்விடத்தே பழகுதல் நன்றன்று என்பதாம்,
    29,  நல்ல மாலையணிந்த மார்பையுடையோனே! என்க,
    30.  காண்டற் கினிய மதிலையுடைய என்க.
    31 பொன்னானியன்ற அரண்மனை என்க. பொருள்-உறுதிப் பொருள்.என்றது, நன்று என்றவாறாம்,