உரை
 
2. இலாவாண காண்டம்
 
17. தேவியைப் பிரித்தது
 
            _____________________சிறந்த
           நன்மாண் தோழர் நண்ணுபு குறுகிச்
           செய்வினை மடிந்தோர்ச் சேர்ந்துறை விலளே
     40    மையறு தாமரை மலர்மகள் தானெனல்
           வையகத் துயர்ந்தோர் வாய்மொழி யாதலின்
           ஒன்னா மன்னர்க் கொற்றுப்புறப் படாமைப்
           பன்னாட் பிரிந்து பசைந்துழிப் பழகாது
           வருவது பொருளென வாசவ தத்தையைப்
 
           37 - 44 ; சிறந்த.,.,,,,.பொருளென
 
(பொழிப்புரை) சிறந்த தோழர் சிலர் உதயணன்பாற்  சென்று பெருமானே! 'தாம் செய்யத் தகுந்த செயல்களைச் செய்யாமல் சோம்புதலுற் றோரைத் திருமகள் வெறுத்து நீங்குவள்' என்பது சான்றோர் கூறியமெய்ம் மொழியாகும். ஆதலின் நின் பகைவேந்தர்க்கு நின்னது ஒழுக்கம் ஒற்றர் வாயிலாய்ப் புலப்  படுதற்கு முன்னரே நீ இவ்வாறு பற்றுள்ள இடத்தேயே ஒடுங்கி  யிருத்தலை விட்டு இவ்விடத்தினின்றும் பிரிந்து சென்று பலநாள் கழித்து மீள்வது நன்றாகும் என்று கழறாநிற்ப என்க.
 
(விளக்கம்) சிறந்த நன்மாண் தோழர் - உயர்ந்த நன்மைகளையுடைய மாட்சிமை பொருந்திய நண்பர் என்க. தெய்வத்தானாக மக்களானாக அரசனுக்கு வந்த துன்பங்களை நீக்குமாறறிந்து நீக்கிப் பின் அத்தகைய துன்பம் வாராவண்ணம் காக்கவல்ல தன்மையுடையோரும், மிகுதிக்கண் மேற் சென்றிடித்துத்திருத்தும் உரிமையுடையோரும் நன்மை பலவற்றையும் எய்துவுப்  போருமாகிய தோழர் என்பார், 'சிறந்த நன்மாண் தோழர்' என விதந் தெடுத்துரைத்தார், நண்ணுபு - நண்ணி. நண்ணுபுகுறுகி  என்றது ஒரு சொன்னீர்மைத்தாய் நின்றது.
    36, செய்வினை மடிந்தோர் - தமது கடமையாகிய தொழிலைச் செய்யாமற் சோம்பியிருந்தவர்,
    40. மையறு தாமரை மலர் மகள் - குற்றமற்ற செந்தாமரை மலரில் உறையும் திருமகள்,
    41, வாய் மொழி - மெய்ம்மொழி,
    (39- 41.) இப்பகுதியோடு,
       'மடியுனாள் மாமுகடி என்ப மடியிலான்
        தாளுளாள் தாமரையி னாள்'              
(குறள். 617) என்னும் திருக்குறளையும் நினைக. ஆதலின் என்றது நீ அவ்வாறு மடிந்திருத்தலான் என்பதுபட நின்றது.
    42. ஒன்னா மன்னர் -பகை மன்னர், பகை மன்னர்க்கு ஒற்றர் வாயிலாய் இக் குற்றச் செய்தி புறப்பட்டுச் சேர்தற்கு முன்னரே என்பது கருத்து. அறிந்தவழி அவை வயிலாகப் புகுந்து வஞ்சிப்பாராகலின்.
   'ஒன்னா மன்னர்க்கு ஒற்றுப் புறப்படாமை' என்றார்.இதனை,
        'காதல காதல் அறியாமை யுய்க்கிற்பின்
         ஏதில எதிலார் நூல்'                  (குறள். 440)
என்னுந் திருக்குறளானும் அதறகுப் பரிமேலழகர் வகுத்த உரை யானும் அறிக.
    43. பசைந்துழி - பற்றிய இடத்திலேயே, பசைந்துழிப்பழகாது பன்னாட் பிரிந்து (போய்) வருவது பொருள் என மாறுக.