உரை
 
2. இலாவாண காண்டம்
 
17. தேவியைப் பிரித்தது
 
           ______________ வாசவ தத்தையைப்
     45    பிரிதல் உள்ளம் பெருந்தகை மறுப்பத்
           தாழிருங் கூந்தலைத் தணப்ப நின்றதோர்
           ஊழ்வினை உண்மையின் ஒளிவளைத் தோளியும்
           வேட்டகம் போகி அடிகள் காட்டகத்
           தரும்பினு மலரினும் பெருஞ்செந் தளிரினும்
     50    கண்ணி கட்டித் தம்மின் எனக்கென
           வள்ளிதழ் நறுந்தார் வத்தவ மன்னனும்
           உள்ளம் புரிந்தனன் ஒள்ளிழை ஒழியக்
           கழிநாட் காலைக் கான நோக்கி
           அடுபோர் மாவூர்ந் தங்க ணீங்க
 
           44 - 54 ; வாசவதத்தையை.........அங்கண்நீங்க
 
(பொழிப்புரை) அது கோட்ட உதயண குமரன் வாசவதத்தையைப் பிரிந்து செல்லும் கருத்தினை மறா நிற்பவும், அவன் வாசவதத்தையைப் பிரிந்து போதற்குரியதோர் ஊழ்வினை இருந்தமையானே கணப் பொழுதும் பிரிதற்கு உடன்படாத இயல்பையுடைய அவ் வாசவதத்தையும் ஒருநாள் உதயணனை நோக்கி 'அடிகளே! நீயிர் வேட்டைமேல் கானஞ் சென்று அரும்பானும் மலரானும் தளிரானும் மாலை தொடுத்துக் கொணர்ந்து எனக்குக் கொடுமின்' என்று இரந்து கூற, அவ்வத்தவவேந்தனும் அவள் வேண்டுகோளை நிறைவேற்ற விரும்பி ஒள்ளிய அணிகலன்களையுடைய அந்நங்கையைப் பிரிந்து மறுநாள் விடியற் பொழுதில் ஒரு போர்ப்புரவியிலேறிக் காட்டிற்குச் செல்லாநிற்ப, என்க.
 
(விளக்கம்) 45. பிரிதல் உள்ளம் - பிரிதற்குரிய கருத்து பெருந்தகை: அன்மொழி; உதயண குமரன்.
    46, தாழ்ந்த கரிய கூந்தலையுடைய வாசவதத்தையை என்க.தணப்ப நின்றது, பிரிதற்குக் காரணமாய் நின்றது.
    47, தோளியும் என்னும் உம்மை சிறப்பு. பிரிதற்கு உடன்படாத இய்புடைய அவளும் என்பதுபட நின்றது.
    48. அடிகள் ; விளி. அடிகள் காட்டகத்து வேட்டம் போகி என மாறுக.
    50,  கண்ணி-தலையிற் சூடும் மாலை.
    51.  வள்ளிதழ் - பெரிய இதழ்.
    52.  ஒள்ளிதழ் ; அன்மொழி; வாசவதத்தை.
    53,  கழிநாட்காலை - மறுநாள் விடியற் காலத்தில், போர்மா - போர்க்குதிரை.