உரை
 
2. இலாவாண காண்டம்
 
17. தேவியைப் பிரித்தது
 
           விம்முறு நிலைமை நோக்கித் துன்னிய
           உறுதி வேண்டும் யூகி மற்றிவன்
           இறுதி செப்பி இவண்வந் தோனெனத்
           தாய்தெரிந் துரைப்பச் சேயிழை தேறி
 
        (சாங்கியத்தாய் வாசவதத்தைக்கு இவன் யூகி என்று உணர்த்துதல்)
                      156 -159 . விம்முறு.......தேறி
 
(பொழிப்புரை) இவ் வண்ணம் வாசவதத்தை ஐயுற்றுத் துன்பமுறா நின்ற நிலைமையினை அறிந்த சாங்கியத்தாய் 'அன்னாய்! நின்னை எய்திய இவன் நுங்கட்கு எப்பொழுதும் ஆக்கத்தையே விரும்பா நின்ற யூகி என்னும் அமைச்சனே ஆவன்; நுமக்கு நலஞ் செயற் பொருட்டுத் தனது பொய்ச் சாவினை உலகுக்குக் காட்டி இவ்விடத்தே தோன்றினான்' எனத்தெரியும்படி கூறா நிற்ப, அதுகேட்ட வாசவதத்தையும் ஐயந் தெளிந்தவளாய் என்க.
 
(விளக்கம்) 156 -7.விம்முறு நிலைமை துன்னிய இவன் (நுங்கட்கு) உறுதிவேண்டும் யூகியே என இயைக்க, உறுதிவேண்டும் - ஆக்கத்தையே விரும்புகின்ற, அவ்வாக்கத்தின் பொருட்டே தனது மாய இறுதியை உலகிற்குக்காட்டி இவ்விடத்தே வந்தான் என விரித்து ஓதுக,
    158. இறுதி - சாக்காடு. செப்பி என்றது, காட்டி என்னும் பொருட்டு, இவண் - இவ்விடத்தே, வந்தோன் என்புழி ஆகாரம் ஓகாரமாய்த் திரிந்தது செய்யுளாகலின்.
    159. தெரிந்துரைப்ப என்புழித் தெரிந்து என்னும் எச்சத்தைச் செயவெனெச்சமாக்குக.