உரை
 
2. இலாவாண காண்டம்
 
18. கோயில் வேவு
 
         
          கலினங் கவவிக் கான்றுநுரை தெவிட்டும்
          வலியுடை யுரத்தின் வான்பொற் றாலிப்
          படலியம் பழுக்கமொடு பஃகறை வில்லாப்
     15    பருமக் காப்பிற் படுமணைத் தானத்.
          தருமைக் கருவி அலங்குமயிர் எருத்தின்
          வயமாப் பண்ணி வாய்க்கயிறு பிணித்துக்
 
        (உதயணன் இவர்ந்து வரும் குதிரையின் மாண்பு)
             12 -17 ; கலினம்.......பிணித்து
 
(பொழிப்புரை) கடிவாளம் அகத்திடப்பட்டு நுரைகான்று உமிழா நிற்ப வலிமையுடைய நெஞ்சின்கண் அணியப்பட்ட தாலியினையும் படலியினையும், அழகிய பழுக்கத்தினையும், பலவாகிய மூட்டுவாய் இல்லாத பருமமாகிய காம்பினையும், இருக்கையிடத்திற்குரிய அரிய பிற கருவிகளையும், அசையா நின்ற மயிரினையுடைய எருத்தினையும் உடையதொரு சிறந்த புரவியைப் பண்ணுறுத்தி வாய்க்கயிறிட்டுக் கட்டி என்க
 
(விளக்கம்) 12.. கலினம்- கடிவாளம். கவவி - அகத்திடப்பட்டு. நுரை   கான்று தெவிட்டும் என மாறுக. நுரை கக்கி உமிழும் என்க.
     13. உரம் - மார்பு, வான் பொன்தாலி - உயரிய பொன்னா லியற்றப்பட்டதோர் அணிகலன்
     14. படலி பழுக்கம் என்பனவும் குதிரையணிகலன்கள்   என்க - பல் தகைவு - பல மூட்டுவாய்.
     15-16. பருமம். குதிரைக் கலணை, பருமக் காப்பு - பண்புத்   தொகை. படுமணைத்தானத்து அருமைக் கருவி என்பது,ஏறி   அமர்தற்குரிய இருக்கைக்குரிய சிறந்த கருவிகள் என்றவாறு. அலங்கு - அசையா நின்ற. எருத்து - பிடர்.
     17. வயமா - குதிரை. பண்ணி, - பண்ணுறுத்தி; ஒப்பனை செயது.   வாய்க்கயிறு - வாயிலிடப்படும் கயிறென்க.