உரை
 
2. இலாவாண காண்டம்
 
18. கோயில் வேவு
 
          குறுக்கை புக்க கொளுவமை கச்சையன்
          அறைக்கண் மருங்கின் அகத்துளை இன்றிக்
     20   கண்ணள வமைந்து கதிர்ந்த மூங்கிற்
          பண்ணமை காழ்மிசைப் பசும்பொன் வலக்கும்
          அடிநிலைச் சாத்தோ டியாப்புப் பிணியுறீஇ
          வடியிலைக் கதிர்வாள் வைந்நுனைக் குந்தமொடு
          வார்ப்பின் அமைத்த யாப்பமை அரும்பொறி
     25   மணிக்கை மத்திகை அணித்தகப் பிணித்துக்
          கோற்கமை வுறுநடைக் குதிரைக் கோதிய
          நூற்க ணாளரொடு நுனித்துத் கதிவினாய்
          வாக்கமை வாளன் கூப்புபு வணங்கிக்
          கடுநடைப் புரவி கைம்முதல் கொடுப்ப
    30    அடுதிறல் அண்ணல் அணிபெற ஏறி
          மறுவில் மாணகர் குறுக வருவழி
 
        18 - 31 ; குறுக்கை.........வருவழி
 
(பொழிப்புரை) கச்சையுடையனாய், மூங்கிற் கோல் மிசைப் பொற்பூண் சுற்றிய அடிநிலைச் சாத்தோடு கால் யாப்பினையும் கட்டி, வாள் குந்தம் முதலியவற்றோடு வார்த்தியற்றிய அரிய பொறியினையும், மணிக் காம்பினையும், உடைய - மத்திகையினையும் அழகுறப் பிணித்துக் குதிரைக்குக் கூறப்பட்ட நூல்களைக் கற்றுமுதிர்ந்த ஆசிரியர்பால் துறைபோகக் கற்று மேலும் அக் குதிரையின் செலவுவகையினையும் கேட்டுணர்ந்த அக் குதிரைப்பாகன் அக் குதிரையோடு வந்து உதயண குமரனைக் கைகுவித்து வணங்கி அதனை அவன் கையிலே கொடாநிற்ப அவ்வண்ணலும் அக் குதிரை .அவ்வழகின் மேலும் அழகினைப் பெறுமாறு அதன்மேல் ஏறிக் குற்றமற்ற அவ் விலாவாண நகரத்தை எய்துதற் பொருட்டு வாரா நிற்கும் பொழுது என்க.
 
(விளக்கம்) 18. குறுக்கைபுக்க கொளு - புலிவடிவமமைந்த மூட்டுவாய்.
  குறுக்கை - புலி,
     19-21, அறைக்கண் மருங்கின் அகத்துளையின்றிக் கண் அளவு அமைந்து கதிர்த்த மூங்கில் பண்ணமை காழ்மிசை   பசும் பொன்வலக்கும் அடிசாத்து - வெட்டுவாயிடத்தும்   உட்டுளை யில்லாததாய் ஒன்றற்கொன்று சமஅளவமைந்த   கணுக்களையுடையதாய் ஒளிவிடா நின்ற சிறந்த மூங்கிலினது   திருத்தப்பட்ட கழியின் மேல் பசிய பொற்பூணைச் சுற்றிய அடிச்சாத்து என்னும் கருவியோடே என்க.   அடிச்சாத்து - ஏறுவோர் அடியைப் பிணித்துக்கொள்வதொரு கருவி; அங்கவடி.
     அறைக்கண்-வெட்டுவாய். அகத்துளை - உட்டுளை.   கண் - கணு - கதிர்த்த - ஒளிவிடாநின்ற, பண் - திருத்தம். வலக்கும்- சுற்றும். பிணியுறீஇ - பிணித்து.
     23-25. வடித்த இலையினையுடைய ஒளிவாளும் கூர்த்த நுனியையுடைய குந்தமும் ஆகிய இவற்றோடு   இரும்பை உருக்கிச் செய்த தொடர்புபட்ட அரிய பொறியினையுடைய மத்திகையினையும் அழகுண்டாகத்   தொடுத்தென்க. வடியிலை ; வினைத்தொகை. கதிர்வாள்; இரண்டாம் வேற்றுமைத் தொகை. வை - கூர்மை  குந்தம் - ஒரு படைக்கலம். வார்த்தற் றொழிலானே அமைத்த  பொறி என்க. இது நீளவும் சுருங்கவும் அமைத்த இயந்திரம்   போலும். மணிக்கை - மணிகளிழைத்த கைப்பிடி, .  மத்ிகை - குதிரைச் சம்மட்டி.
     26. அம்பின் வேகத்தை ஒத்த வேகத்தையுடைய நடையை உடைய குதிரைகளுக்கு என்க.
     27. நூல்-குதிரை நூல் நுனித்து - கூரிதாய்க் கற்று. கதிவினாய் - செலவினை வல்லார்வாய்க் கேட்டுணர்நத   (வாக்கமைவாளன் ; திருத்த அமைதியுடைய குதிரைப் பாகன் என்க,)
     28. கூப்புபு - கூப்பி,
     29, கைமுதல் - கையில்.
     30. அடுதிறல்அண்ணல் ; உதயண குமரன்.
     31. மறு -குற்றம். மாணகர்-மாட்சிமையுடைய இலாவாண நகர்; அரண்மனையுமாம்.