உரை
 
2. இலாவாண காண்டம்
 
18. கோயில் வேவு
 
         
          ___________________தமைத்த
          தண்ணிதிப் பலகைச் சந்தனச் சார்வணைக்
          கண்ணுற நினைத்த கைப்புடை ஆவணத்
          திருமணி அருங்கலம் எளிதினின் தரீ இக்
          காலத்தின் நடக்குங் கூலக் கொழுங்கடைக்
     45   கடுவுங் கோட்டமுங் காழகிற் குறையும்
          அரக்கும் அதிங்கும் அரும்பெறற் பயினும்
          நறையு நானமு நாறிரு வேரியும்
          அறைவெள் ளாரமும் அன்னவை பிறவும்
          அண்ணரும் பேரழல் ஆக்கிய கமழ்புகை
     50   மாதிரத் தியங்குஞ் சோதிடர் விமானமும்
          வாச மூட்டும் வகையிற் றாகி
          மஞ்சொடு நிரைஇ வெஞ்சுடர் மழுக்க
          இருள்படப் பரந்த மருள்படு பொழுதிற்
 
          (உதயணன் புகைத் தோற்றத்தைக் கானுதல்,)
        40- 53 ; அமைந்த...................................பொழுதில்
 
(பொழிப்புரை) பொற்பலகையும் சந்தனப்பலகையுமாகிய சார்வணைகளிடப்பட்ட அவ்விருக்கையின்கண்ணிருந்து வணிகர்தாம் கருதிய பேரணிகலன் முதலியவற்றை எளிதாகவே வருவித்துக் காலத்திலே விற்கும் கடைத்தெருவின்கண் பல பண்டங்களும் குவிக்கப்பட்ட கூலக்கடைகளின்கண் உள்ள கடுவும், கோட்டமும், அகிற்கட்டையும், அரக்கும், அதி மதுரமும், பயினும், நறையும், நானமும், வெட்டிவேரும், சந்தனக் குறடும், இன்னோரன்ன பிறவுமாகிய நறுமணப் பொருள்களிற் பற்றி அணுகுதற்கரிதாகிய அப் பெருநெருப்பு உண்டாக்கிய நறுமணமுடைய புகை, வானத்தின்கண் இயங்கும் சோதிடருடைய விமானத்தையும் மணமூட்டும் தன்மையுடையதாகி முகில்போல நிரம்பி ஞாயிற்று மண்டிலத்தையும் மறைத்தலானே இருள உண்டாகப் பரவிய மயங்குதற்குக் காரணமான அந்தப் பொழுதிலே என்க.
 
(விளக்கம்) 40 அமைத்த - அமைக்கப்பட்ட.
     41 தண்ணிதிப்பலகை - பொற்பலகை. சார்வணை - சார்தற்குரிய  அணை.வணிகர் அணைக்கண்ணுற இருந்து என்க,
     42- 44. தாம் நினைத்த அருங்கலங்கள் முதலியவற்றைக் காலத்தில், எளிதினில் தரீஇ நடக்கும் ஆவணக் கூலக் கொழுங்கடை   என மாறிக் கூட்டுக, வணிகர்தாம் விரும்பிய கல முதலியவற்றை  அவ்வவற்றைக் கொள்ளத்தகுந்த காலத்திலே எளிதாக வருவித்து  விற்றலாகிய தொழில் நடாத்தா நின்ற ஆவணத்தில் இருமருங்கினும  உள்ள கூலக்கடைகளில் உள்ள கடு முதலியவற்றை என்க,
     43. திருமணி அருங்கலம் - அழகிய மணிகளிழைத்த - பேரணி   கலம்.மணியும் கலமும் எனினுமாம். எளீதினில் - எளிதாக. தரீஇ - வருவித்து.
     44. காலத்தில்- அவ்வப் பொருள் மலிவாகக் கிடைக.  காலத்திலே என்க. நடக்கும் - நடத்தா நின்ற என்க. கூலக்கொழுங்கடை  பல பண்டங்களும் விற்கும் கொழுவிய கடை. 45 கடுமுதலியன-நறுமணப் பொருள்கள். கடு - கடுக்காய், கோட்டம்- ஒருவகை மணப்பொருள், கொட்டம் என்றும் பாடம். கொட்டம்- இதுவும் ஒருமணப்பொருள். 'கொட்டமே கமழும  குழலாளொடு''- (,தேவார -திருஞா, கோயில். 2) எனவருதல் காண்க.  காழ்- வயிரம். அகிற குறை - அகிற்கட்டை.
     46. அரக்கு - சாதிலிங்கம். அதிங்கு - அதிமதுரம். >  பெறுதகலரியபயின் என்க. பயின் - பிசின், நறுமணமுடைய   மரத்தினின்றும் வடிந்த பிசின் என்பது கருத்து, அஃதாவது சாம்பிராணி.      47 நறை - ஒருவகை மணமுடைய கொடி. நானம்- புழுகு.   இருவேரி - வெட்டிவேர்  48 அறைவெள்ளாரம் - அறுக்கப்பட்ட வெள்ளிய சந்தனக் குறடு,   அன்னவை - இவைபோல்வன.
     49, அண்ணரும் - அணுகுதல் அரிய. பேரழல்- பெருநெருப்பு.
     50. மாதிரம் - வானம், சோதிடர்- தேவருள் ஒருவகையினர்.   அவராவார் கோளும் நாளும் ஆகிய - தேவர், இதனை,
   'சந்திரரும் சூரியரும் தாரகையு நாண்மீனும்
   வெந்திறல கோட்களுமாம் என விளங்கி விசும்பாறா
   மந்தரத்தை வலஞ்சூழ்ந்து வருபவரும் நிற்பவருஞ்
   சுந்தரஞ்சேர் மணிமுடியாய் சுடர்பவருஞ் சோதிடரே' 

  எனவரும் சூளாமணியானும் உணர்க.           (துறவு. 206)
     51. வகையிற்று-வகையினையுடைத்தாகி; தன்மையை உடைத்தாகி
  என்பது கருத்து.
     52, மஞ்சொடு-முகில்போல என்க. ஒடு. - ஈண்டு உவமம் கருதி
  நின்றது. இனி முகிலோடு எனினுமாம். வெஞ்சுடர் - ஞாயிறு.
     53. மருள் - மயக்கம்.