உரை
 
2. இலாவாண காண்டம்
 
19. தேவிக்கு விலாவித்தது
 
         
    10     ஆரளைச் செறிந்த அருஞ்சின நாகத்துப்
          பேரழற் காணிய பேதை மாந்தர்
          வாயின் மருங்கின் தீயெரி கொளீஇயது
          செயிற்படு பொழுதிற் செம்முக நின்றுதம்
          உயிரொழிந் ததுபோல் உறுதி வேண்டார்
    15    அடங்கார் அடக்கிய அண்ணல் மற்றுநின்
          கடுஞ்சினம்பேணாக் கன்றிய மன்னர்
          கறுவு வாயிற் குறுதியாக
          இகப்ப எண்ணுதல் ஏதம் உடைத்தே
 
        10 - 18 ; ஆரளை,,,,ஏதமுடைத்தே
 
(பொழிப்புரை) அது கண்ட தோழர் உதயணனைத் தடுத்து நின்று ''அண்ணலே! வளையின்கண் அடங்கிய அரிய சினத்தையுடைய நாகத்தினது பெரிய சினத்தைக் கண்டு களிக்க எண்ணிய அறிவிலிகள், அவ் வளையினது வாயி லின்கண் நெருப்பினைக் கொளுவிப் பின்னர் அந் நாகம் சினங்கொண்டு எழாநின்ற பொழுது அதன் முன்னரே நின்று அதனாற் கடியுண்டு உயிர் நீத்ததுபோல் நினது வெகுளியைப் பொருட்படுத்தாது நின்னைச் சினப்பித்துக் கெடத்துணிந்த பேதையராகிய நின்பகை மன்னர் சினத்திற்கு உறுதியாக நீ இறந்துபடத் துணிதல் குற்றமுடைய செயலாகும்'' என்று கூறித் தடுத்து என்க.
 
(விளக்கம்) 10. ஆர் ஆளை-பொருந்தாநின்ற வளை. ஆரளை ;  வினைத்தொகை, நாகம்- நல்லபாம்பு.
    11.  பேரழல்-பெரிய சினம். காணிய-கண்டு களித்தற்   பொருட்டு. பேதை மாந்தர் - அறிவில்லாத மனிதர்.
    12.  வாயின் மருங்கில் -அவ்வளையின் வாயிலில். தீயெரி ; வினைத்  தொகை; தீய்க்கும் நெருப்பென்க. அது-அந்நாகம்.
    13.  செயிர்-சினம். செம்முகம்-நேர்முகமாக.
    14,  உறுதி - தம்முயிர்க்கு ஆக்கத்தை,
    15.  பகைவரை அடக்கிய தலைவனே! அண்ணல்: விளி,.
    16.  கடிய வெகுளியைப் பொருட்படுத்தாத நின் பகைவராகிய பேதை மன்னர் என்க இதன்கண், நாகம், உதயண குமரனுக்கும், வளை, அரண்மனைக்கும்   பேதை மாந்தர் கன்றிய மன்னர்க்கும் உவமைகள்,
    17. கறுவு வாயிற்கு-வெகுள்தற் குரிய வழிக்கு, உறுதியாக ஆக்கமாக.
    18. இகப்ப-உயிர்நீப்ப. ஏதம்-குற்றம்.