உரை
 
2. இலாவாண காண்டம்
 
19. தேவிக்கு விலாவித்தது
 
          ஆகிய தறியும் அரும்பொருட் சூழ்ச்சி
    20    யூகியின் அல்லதை உதயண குமரன்
          உள்ளம் இலனென வெள்ளைமை கலந்த
          புறத்தோர் உரைக்கும் புன்சொன் மாற்றம்
          அகத்தோர்க் கென்றும் அகஞ்சுடல் ஆனா
          தாங்ஙனம் அந்நிலை அறிந்து மனங் கவலா.
    25    தோங்கிய பெருங்குலந் தாங்குதல் கடனாப்
          பூண்டனை யாகுதல் பொருண்மற் றிதுவென
          மாண்ட தோழர் மாற்றுவனர் விலக்க
 
        19-27 ; ஆகியது............விலக்க
 
(பொழிப்புரை) மேலும் யூகி என்னும் அமைச்சனையன்றி உதயண குமரன் தனக்கென ஊக்கமுடையானல்லன் என்று பகைவர் கூறாநின்ற பேதைமை கலந்த தீச் சொல் நின் தோழராகிய எம்முடைய நெஞ்சத்தை என்றும் சுடுதல் ஒழியாது; ஆதலின் அங்ஙனமாகிய அந்நிலைமையினையும் நீ கருதியுணர்ந்து நெஞ்சம் கவலாமல் உயர்ந்த நின் பெருங் குலச் சிறப்பினைப் பேணிக்கோடலே நின் கடமையாக மேற் கொள்ளுதலே சிறந்த செயலாகும் என்று கூறித் தடுத்து விலக்காநிற்ப என்க,
 
(விளக்கம்) 19 - 20 ஒரு செயலாலே விளையும் பயனை   முன்னரே அறிதற்குக்காரணமான அரிய பொருளாராய்ச்சியிற்   சிறந்தவானாகிய யூகியென்னும் அமைச்சனுக்குப் பின்னர் என்க,
    20, அல்லதை-அன்றி.
    21-22, தனக்கென ஓர் ஊக்கமுடையானல்லன் என்க.எனப்  புறத்தோர் உரைக்கும் வெள்ளைமை கலந்த புன்சொல் என மாறுக,
    22-23. புன்சொல்லாகிய மொழி என்க, புறத்தோர்   அகத்தோர் என்பன பகைவர் நண்பர் என்னும் பொருள்பட நின்றன. ஆனாது- ஒழியாது.
    24. அங்ஙனமாகிய அந்நிலைமையினை என்க,
    25. குலத்தின் சிறப்பினை மேற்கோடர் நினது கடனாகக்   கொண்டென்க.
    26, பொருள் - உறுதிப் பொருள்.
    27, மாண்ட தோழர் - மாட்சிமையுடைய நண்பர்.