உரை
 
2. இலாவாண காண்டம்
 
19. தேவிக்கு விலாவித்தது
 
         
    60    மணியு முத்து மணியு மிழந்துதிர்ந்
          தாரக் கம்மஞ் சாரவீற் றிருந்து
          கொள்கைக் கட்டழல் உள்ளுற மூட்டி
          மாசுவினை கழித்த மாதவர் போலத்
          தீயகத் திலங்கித் திறல்விடு கதிரொளி
    65    சேடுறக் கிடந்த செம்பொன் செய்கலம்
          பொன்னணி மார்பன் முன்னண விடுதலின
 
        60 - 66 ; மணியும்........முன்னண விடுதலின்
 
(பொழிப்புரை) பின்னர்த் தம்பாலமைந்த மணிகளையும் முத்துக்களையும். இழந்து உதிர்ந்த வடங்களின் பக்கலிலே அழுக்காகிய இருவினைகளையும் கழித்துவிட்ட மாதவர்போலத் தீயினூடே கிடந்து விளங்கித் திறலோடே வீசாநின்ற ஒளி அழ குறக் கிடந்த செம்பொன்னாலியன்ற அணிகலன்களை உதயணன் பக்கலிலே கொணர்ந்து இட்டமையானே, என்க.
 
(விளக்கம்) 60 - 65. .இதனுள் துன்பஞ் சுடச்சுட நோற்றலாலே தம் இருவினையாகிய குற்றத்தைக் கழித்த துறவியர், தீயினுட் கிடந்து அது சுடுதலானே தம்பாற் பதித்த முத்து முதலியன   கழியப்பெற்று மாசு நீங்கி மிக்கொளிரும் பொன்னணிகலன்கட்கு உவமை
    60, மணி என்றது, முத்தொழிந்த மணிகளை- அணி-அழகு.
    61. ஆரமாகிய கம்மம். ஆரம் -வடம். கம்மம் ; ஆகுபெயரான்   அணிகலனைக் குறித்து நின்றது
    62, கொள்கை-அவாவறுத்தற் கருத்து. அக் கருத்து அவரைத்  துன்புறுத்துதலின் தீயை உவமை எடுத்துக் கூறினார்.
    63. மாசுண்டாக்கும் இருவினைகளையும் என்க. , மாசு ஆகு பெயராற் பிறப்பினைக் குறித்து நின்றது. 'இருள்சேர் இருவினை'
  என்றார் வள்ளுவனாரும். இதனோடு,
          'சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
          சுடச்சுட நோற்கிற் பவர்க்கு'
  எனவரும் திருக்குறளையும் நினைக.
    65. சேடு-அழகு. செம்பொன்னாற் செய்த அணிகலன் என்க.
    66, மார்பன் ; உதயணன். அண இடுதலின்-அணுக இடுதலானே என்க.