உரை
 
2. இலாவாண காண்டம்
 
19. தேவிக்கு விலாவித்தது
 
          பனிநாட் புண்ணியத் தணிபெறு திங்கள்
          அந்தியுண் முளைத்த வெண்பிறை போலச்
          செந்தீச் சிறுநுதன் மூழ்கத் தீந்து
    90    நிலமிசை மருங்கின் வீழ்ந்தனை யோவெனத்
          திலக நோக்கிப் பலபா ராட்டியும்
 
        87 - 91 ; பனிநாள் .................பாராட்டியும்
 
(பொழிப்புரை) பின்னர் வாசவதத்தையின் திலகத்தை நோக்கித் ''திலகமே ! நீ பனி நாளைப் புண்ணியயும் பண்பினையும் அழகினையும் உடைய மார்கழித் திங்களில் மாலைப்பொழுதிலே செக்கர் வானத்தே தோன்றிய வெண்பிறை அச் செக்கர் வானத் துள்ளே மூழ்கி மறைந்தாற் போன்று வாசவதத்தையின் சிறிய நெற்றி சிவந்த நெருப்பினுள் மூழ்கித் தீய்ந்தொழியா நிற்பப் புகலிடம் பிறிதின்றி நிலத்தின் மேல் வீழ்ந்தனையோ'' என்று இன்னோரன்ன பலவும் பாராட்டிக் கூறியும் என்க.
 
(விளக்கம்) 87, பளிநாள் திங்கள், புண்ணியத் திங்கள், அணி பெறுதிங்கள் எனத் தனித்தனி கூட்டுக.   திங்கள்-ஈண்டு மார்கழித் திங்கள், அக்காலத்தே   செக்கர் வானம்.  தீப்பிழம்பு போன்று சிறந்து தோன்றுதல்   கண்டுணர்க, அங்ஙனமாகலின் பனிநாட்டிங்களை விதந்தோதினர்.  திங்களுள் வைத்து மார்கழித் திங்கள் சிறந்தது என்பது பல சமயத்தார்க்கும் ஒப்பமுடிந்ததோர்- உண்மை, ஆகலின் புண்ணியத்    திங்கள் என்றார், உலகினுள் செந்நெல் முதலியன எல்லாம் சிறந்து பயனீன்று  அழகாகத் தோன்றுதலுண்மையின் அணிபெறு திங்கள் என்றார்.
    88, அந்தி என்றது ஆகுபெயரான் செக்கர் வானத்தைக்குறித்து  நின்றது. அது தீயிற்குவமை. சிறுநுதற்கு வெண்பிறை உவமை .
    89. தீந்து-தீய்ந்து.
    90, நிலமிசை மருங்கின்- நிலத்தின்மேல்,
    91, திலகம்-நெற்றியிற் பொட்டாக அணிவதொரு பொற்பட்டமாகிய   அணிகலன். இதனைக்கலியின்கண் வரும், '' திலக அவிரோடை''
  (67 ; 11) என்னும் அடியானும் உணர்க.