உரை
 
2. இலாவாண காண்டம்
 
19. தேவிக்கு விலாவித்தது
 
          இலைப்பெரும் பூணும் இதயவா சனையும்
          நலப்பெருங் களிகையு நன்முத் தாரமும்
          பன்மணிப் பூணுஞ் சின்மணித் தாலியும்
    120    முத்தணி வடமுஞ் சித்திர வுத்தியும்
          நாணுந் தொடரும் ஏனைய பிறவும்
          மெய்பெறப் புனைந்து கைவல் கம்மியச்
          செய்கையிற் குயிற்றிய சித்திரங் கொளீஇப்
          பூணணி யுள்ளு மாண்அணி யுடையவை
    125    ஆகக் கேற்ப அணிகம் வாராய்
          வேகத் தானை வேந்தன் மகளே
          தனித்தாய் இயங்கலுந் தாங்கினை யோவெனப்
          பனித்தார் மார்பன் பலபா ராட்டியும்
 
        117 - 128; இலை,.,,.,,,,,,பாராட்டியும்
 
(பொழிப்புரை) மன்னன் மகளே! இலைத் தொழிலமைந்த பிற பேரணிகலன்களும், இதயவாசனையும்,. களிகையும், முத்தாரமும் பல மணிகளும் இழைத்த அணிகலன்களும், தாலியும், முத்துவடமும் சித்திரவுத்தியும், பொன்னாணும், சங்கிலியும், இன்னோரன்ன பிற அணிகலன்களுமாய் உடலில் அணியும் பொருட்டுக் கைவன்மையுடைய கம்மத் தொழிலானே சித்திர வேலையும் சேர்த்துச் செய்த அணிகலன் களுள்ளும் ஆராய்ந்து மாட்சிமையுடைய அழகுடையவற்றைத் தேர்ந்து நினது உடலுக்குப்பிரிந்து தனித்தியங்குதலையும் பொறுக் கும் வன்மையுடையை ஆயினையோ என்று குளிர்ந்த மலர்மாலை யணிந்த அவ்வுதயண குமரன் மேலும் பல அணிகலன்களையும் நோக்கிப் பாராட்டி அரற்றியும் என்க.
 
(விளக்கம்) 117. இலைப்பெரும்பூண்-இலைத் தொழிலமைந்த பேரணிகலன். இதயவாசனை - ஒரு மார்பணிகலன். களிகை-ஒரு பேரணிகலன், பேரணிகலன் என்பது தோன்ற நலப்பெருங் களிகை    என்றார். இவ்வாசிரியரே 'கலங்கவின் பெற்ற கண்ணார் களிகை'   (1-41;82) என்றும், '.திருக்கேழ்க் களிகை' (3-22;222) என்றும்   பிறாண்டும் ஓதுவர்.  நன்முத்தாரம் (120). முத்தணிவடம் என்பன முத்தாலியன்ற    வேறு வேறு அணிகலன்கள்.
    120, சித்திரவுத்தி-சித்திரமமைந்த சீதேவி என்னும் அணிகலன்.
    121. நாண் - பொற்கயிறு. தொடர்-சங்கிலி.
    122, மெய்யில் அணிதல் பெறும் பொருட்டென்க.
    123, குயிற்றிய - செய்த. சித்திரங் கொளீஇக் குயிற்றிய என மாறுக,
    124. பூணணி: வினைத்தொகை. மாண்அணி-மாட்சிமையுடைய அணிகலன்.
    125. ஆகக்கு-ஆகத்திற்கு, உடலுக்கு-மார்பிற்கு எனினுமாம்.
    126. சினமுடைய படைகளையுடைய பிரச்சோதன மன்னன் மகளே என்க.
    128, மார்பன் ; உதயணகுமரன்.